தமிழகத்தில் இன்று
பாட்னா:
பிகார் சட்டப்பேரவை உறுப்பினராக ராப்ரி தேவி நாளை பதவியேற்க உள்ளார்.
பிகார் முதல்வராக உள்ள அவர், ராகோபூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தள வேட்பாளரைத்தோற்கடித்தார். பிகார் முதல்வராக பதவி வகித்து வந்தாலும், அவர் சட்டப்பேரவை உறுப்பினராக இல்லை.
சட்டப்பேரவை உறுப்பினர் அல்லாதவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்தில் மாநில சட்டப்பேரவைக்கு ஏதாவது ஒருதொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற விதி உள்ளது.
அதன் படி, பிப்ரவரியில் நடந்த பொதுத் தேர்தலில் இரு தொகுதியில் வெற்றி பெற்ற பிகார் மாநில முன்னாள் முதல்வரும், ராப்ரி தேவியின் கணவருமானலல்லு பிரசாத், ராகோபூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து அத் தொகுதி உள்பட வேறு சில தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. ராகோபூர் தொகுதியில் போட்டியிட்ட ராப்ரி தேவிவெற்றி பெற்றார். அவர் வியாழக்கிழமை பதவியேற்க உள்ளார்.
அவர் தவிர, சமீபத்திய இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் சுஷில் குமார் சிங், மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பு கமிட்டி உறுப்பினர்அரூப் சட்டர்ஜி ஆகியோரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பதவியேற்க உள்ளனர். இவர்கள் மூன்று பேருக்கும் மாநில ஆளுநர் சதானந்த் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
பிகார் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ராப்ரி தேவி முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.