தமிழகத்தில் இன்று
காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க எங்கு வேண்டுமானாலும் வருவாராம் முஷாரப்
இஸ்லாமாபாத்:
காஷ்மீர் பிரச்சினை குறித்துப் பேச்சவார்த்தை நடத்த எங்கு வேண்டுமானாலும் வரத் தயார் என்று பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்கூறியுள்ளார்.
அமெரிக்காவின் சி.என்.என். தனியார் தொலைக் காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், காஷ்மீர்ப் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா முன்வர வேண்டும்.இதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் வர நான் தயாராக இருக்கிறேன்.
இப்பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இங்கு அமைதியான சூழ்நிலை உருவாக வேண்டும்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் எந்தப் பேச்சுவார்த்தையானாலும் அது காஷ்மீரை மையமாகக் கொண்டு மட்டுமே இருக்கவேண்டும்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகள், பிற முயற்சிகள் தோற்று விட்டன. எனவேஐ.நா சபை அல்லது மூன்றாவது நாட்டின் மத்தியஸ்தம் அவசியமாகியுள்ளது. இருப்பினும் இந்தியா விரும்பினால், இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான்தயாராகவே உள்ளது.
இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் குறைய வேண்டும். இது கண்டிப்பாக நடந்தே ஆக வேண்டும். பிரச்சினைகள் குறித்து முதலில் இருவரும் பேசவேண்டும். அதற்குப் பிறகு அவற்றைத் தீர்ப்பது குறித்து முடிவெடுக்கலாம்.
கார்கில் போன்ற சூழ்நிலை எதிர்காலத்தில் எழாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை இரு நாடுகளும் சேர்ந்து எடுக்க வேண்டும்.
இந்தியாவுடன் போட்டி போட்டுக் கொண்டு பாகிஸ்தான் ஆயுதப் போட்டியில் இறங்கவில்லை. இருப்பினும் எங்களது நாட்டின் பாதுகாப்பு குறித்த நாங்கள்சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லை என்றார் அவர்.