தமிழகத்தில் இன்று
பஸ், டிராக்டர் எரிப்பு: கடலூர் மாவட்டத்தில் பதற்றம்
கடலூர்:
தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் சமூக விரோதிகளால் தனியார் பஸ் மற்றும் டிராக்டர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அரசு பஸ்கள் மீது கல்வீச்சுநடத்தப்பட்டது. இதனால், அப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள புளியங்குடியில், கடந்த சனிக்கிழமை 3 தலித் மக்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பின் சார்பில் கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், வேறு காரணங்களுக்காக பந்த் வேறுஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இருப்பினும், புதுவை-விழுப்புரம் மார்க்கத்தில் நெல்லிக்குப்பம் அருகே ஒரு பஸ்ஸுக்கும், டிராக்டருக்கும் சில சமூக விரோதிகள் தீ வைத்தனர். இதில்பஸ்ஸும், டிராக்டரும் முழுவதும் எரிந்து சாம்பலாயின.
குறிஞ்சிப்பாடி அருகே ஒரு லாரிக்கு சிலர் தீ வைக்க முயன்றனர். ஆனால், அம் முயற்சி தடுக்கப்பட்டது. இது தவிர, புதுச்சத்திரம் மற்றும்கடலூர்-சிதம்பரம் மார்க்கத்தில் பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது.
இத்தகைய சம்பவங்களால், கடலூர் மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவியது. இதையடுத்து, போலீஸ் காவலுடன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.மாவட்டம் முழுவதும் தனியார் பஸ்கள் இயங்கவில்லை.
மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநில சட்டம் ஒழுங்கு ஐஜி கே. சுப்பையா, கடலூரில் முகாமிட்டு சட்டம்-ஒழுங்குநிலைமையைக் கண்காணித்து வருகிறார்.
யு.என்.ஐ.