தோல்வியைத் தழுவியது இந்தியா: சதத்தை நழுவவிட்டார் டெண்டுல்கர்
டாக்கா:
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில்தோல்வியுற்றது.
டாக்காவில் நடைபெற்று வரும் இப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. கேப்டன்ஜெயசூர்யாவின் அதிரடி ஆட்டத்தினால், அந்த அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்தது.
ஜெயசூர்யா 105 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக அட்டபட்டு 42 ரன்களும், அரவிந்த டிசில்வா 23 ரன்களும், கலுவிதரனா 33ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அகர்கர், டெண்டுல்கர் இருவரும் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
277 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், இந்தியா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. டெண்டுல்கரும், கங்குலியும் துவக்கஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர்.
இலங்கை பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். டெண்டுல்கர் மட்டும் ஓரளவு நின்று ஆடி 95 பந்துகளில் 93ரன்கள் எடுத்து அவுட்டானார். திராவிட் 24 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.
இலங்கை அணியில் வீரரத்னே சிறப்பாகப் பந்து வீசி 3 விக்கெட்டுகளையும், ஸோய்சா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சதமடித்த இலங்கை கேப்டன்ஜெயசூர்யா ஆட்ட நாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியா அடுத்து பாகிஸ்தானை எதிர்த்து சனிக்கிழமை விளையாடுகிறது. அப் போட்டியில் வெற்றி பெற்றால்தான் இறுதிப் போட்டிக்கு நுழையமுடியும்.வெள்ளிக்கிழமை பாகிஸ்தானுக்கும், பங்களாதேஷுக்கும் இடையே ஆட்டம் நடைபெறுகிறது.
யு.என்.ஐ.