தமிழகத்தில் இன்று
குடும்ப நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழகம் முதலிடம்
சென்னை:
குடும்ப நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகமும், கேரளமும் முதலிடத்தில் உள்ளன என்று மத்திய குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறை இணைஅமைச்சர் ரீட்டா வர்மா தெரிவித்தார்.
சென்னை வந்த அவர் தமிழக பா.ஜ.க. அலுவலகத்தில் செய்தியாளர்கள்ை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:
குடும்ப நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழகமும், கேரளமும் முன்னணியில் உள்ளன. வட இந்திய மாநிலங்கள் இவ்விஷயத்தில் கெட்டபெயர் சம்பாதித்துள்ளன.
எய்ட்ஸ், மலேரியா ஆகிய நோய்களுக்கான நான்கு முகாம்கள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. குடும்ப நலத்தை பேணுவதில் நம்மிடம் சிறப்பானதிட்டங்கள் உள்ளன. ஆனால் அதை உரிய வகையில் கண்காணிக்கத் தவறி விட்டோம். இதுதான் பிரச்சினை.
தமிழக மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக தகவல் எனக்கில்லை. மத்திய அரசை பொறுத்தவரையில் மருந்துகள் வாங்குவதற்கு நிதிப்பற்றாக்குறை இல்லை. பான்பராக், குட்கா போன்ற பாக்கு வகைகளை தடை செய்ய வேண்டும் என்பது நல்ல யோசனை. பரிசீலிக்கப்படும்.
நமது நாட்டில் வளரும் அரிய மூலிகைச் செடிகளுக்கான காப்புரிமையை வெளிநாட்டினர் வாங்கி விட்டது உண்மைதான். அதில் எந்தளவுக்கு விழிப்புணர்வுடன்இருக்க வேண்டுமோ, அப்படியிருக்கத் தவறி விட்டோம். அதனால்தான் இந்த நிலைமை ஏற்பட்டது.
பெண் சிசுக் கொலை என்பதை குற்றமாக மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது ஒரு சமூகக் குற்றம். பெண்கள் கல்வி அறிவு பெற்றவர்களாகமாற வேண்டும். அதன் மூலம் இதைத் தடுக்க முடியும். இதற்கு சமூக இயக்கம் அவசியம் என்றார் ரீட்டா வர்மா.