சிட் பண்ட் மோசடியா? -ம-ழுப்-பு-கி-றார் மனோஜ் பிரபாகர்
ஜூ-ன்08, 2000
பாஞ்சாலி சபதம்
5. துரியோதனன் பொறாமை
(தொடர்ச்சி)
காற்றெனச் செல்வனவாய் - இவை
கடிதுகைத் திடுந்திறன் மறவ ரொடே,
போற்றிய கையின ராய்ப் - பல
புரவலர் கொணர்ந்து, அவன் சபைபுகுந் தார்,
சேர்ந்தவை பலபல மந்தையுண் டாம்
ஆற்றல் மிலேச்சமன் னர் - கொலை
அரபியர் ஓட்டைகள் கொணர்ந்துதந் தார் (33)
தென்றிசைச் சாவக மாம் - பெருந்
தீவு தொட்டே வட திசையதனில்
நின்றிடும் புகழ்ச்சீ னம் - வரை
நேர்ந்திடும் பலப்பல நாட்டின ரும்
வெறிகொள் தருமனுக் கே - அவன்
வேள்வியல் பெரும்புகழ் விளையும்வண் ணம்,
நன்றுபல் (பொருள்) கொணர்ந் தார். புவி
நாயகன் யுதிட்டிரன் என வுணர்ந்தார்,(34)
ஆடுகள் சிலர்கொணர்ந் தார் -பலர்
ஆயிர மாயிரம் பசுக் கொணர்ந்தார்
மாடுகள் பூட்டின வாய்ப் - பல
வகைப்படு தானியம் சுமந்தன வாய்
ஈடுறு வண்டி கொண்டே - பலர்
எய்தினர், கரும்புகள் பலகொணர்ந் தார்
நாடுறு தயில வகை - நறு
தானத்தின் பொருள் பலர் கொணர்ந்துதந் தார் (35)
நெய்க்குடம் கொண்டுவந்தார் - மறை
நியமங்கொள் பார்ப்பனர் மகத்தினுமங் கே
மொய்க்குமின் கள்வகைகள் - கொணடு
மோதினர் அரசினம் மகிழ்வுற வே
தைக்கு நற் குப்பாயம் - செம்பொற்
சால்வகைகள், போர்வைகள், கம்பளங்கள்,
கைக்குமட் டினுந்த னோ - அவை
காண்பவர் விழிகட்கும் அடங்குப வோ? (36)
தந்தத்தில் கட்டில் களும் - நல்ல
தந்தத்தின் பல்லக்கும், வாகன மும்,
தந்தத்தின் பிடிவாளும் - அந்தத்
தந்தத்திலே சிற்பத் தொழில்வகை யும், இவையனுத் தும்
தந்தத்தி லாதன மும் - பின்னும்
தமணிய மணிகளில் இவையனைத் தும்
தந்தத்தைக் கணக்கிட வோ? - முழுத்
தரணியின் திருவும்இத் தருமனுக் கோ? (37)
(வேறு)
என்றிவ் வாறு பலபல எண்ணி
ஏழையாகி இரங்குத லுற்றான்.
வன்றி றத்தொரு கல்லெனு நெஞ்சன்,
வானம் வீழினும் அஞ்சுதல் இல்லான்,
குன்றமொன்று குழைவற் றிளகிக்
குழம்பு பட்டழி வெய்திடும் வண்ணம்
கன்று பூதலத் துள்ளுறை வெம்மை
காய்ந்தெழுந்து வெளிப்படல் போல (38)
நெஞ்சத் துள்ளோர் பொறாமை யெனுந்தீ
நீள்வதால் உள்ளம் நெக்குருகிப்போய்,
மஞ்சன் ஆண்மை மறந்திண்மை மானம்
வண்மை யாவும் மறந்தன னாகிப்
பஞ்சை யாமொரு பெண்மகள் போலும்
பாலர் போலும் பரிதவிப் பானாய்க்
கொஞ்ச நேரத்திற் பாதகத்தோடு
கூடியேஉற வெய்திநின் றானால் (39)
யாது நேரினும் எவ்வகை யானும்
யாது போயினும் பாண்டவர் வாழ்வைத்
தீது செய்து மடித்திட எண்ணிச்
செய்கை யொன்றறி யான்திகைப் பெய்திச்
சூதும் பொய்யும் உருவெனக் கொண்ட
துட்ட மாமனைத் தான்சர ணெய்தி,
ஏதுசெய்வம் எனச் சொல்லி நைந்தாம்
எண்ணத் துள்ளன யாவும் உரைத்தத (40)
மன்னர் மன்னன் யுதிட்டிரன் செய்த
மாம கத்தினில் வந்து பொழிந்த
சொன்னம் பூண்மணி முத்திலை கண்டும்,
தோற்றங் கண்டும் மதிப்பினைக் கண்டும்,
என்ன பட்டது தன்னுளம் என்றே
ஈன மாமன் அறிந்திடும் வண்ணம்
முன்னம் தான் நெஞ்சிற் கூறிய வெல்லாம் (41)
மூடன் பின்னும் எடுத்து மொழிந்தான்.