தமிழகத்தில் இன்று
தாலி திருடியவனை துரத்திப் பிடித்த "சூப்பர் உமன்
சென்னை:
தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய திருடனை விடாமல் விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார் ஒருபெண்.
இந்த வீரப் பெண் பற்றிய விவரம் இதோ:
சென்னை சைதாப்பேட்டை சி.ஐ.டி.நகர் முதலாவது மெயின் ரோட்டில் உள்ள வீட்டில் வசிப்பவர் ஜனா. வயது 22.திருமணமானவர். கணவர் வேலைக்கு சென்று விட்ட சமயத்தில் வீட்டுக்குள் சமையல் வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தார்.
பூட்டப்பட்டிருந்த கதவு திடீரென்று தட்டப்படும் சத்தம் கேட்டது. பகல் நேரம் என்பதால் பயப்படாமல் கதவைதிறந்தார். வாசலில் நின்றிருந்த திருடன், "சார் இருக்கிறாரா? என்று விசாரித்தான். ஜனா இல்லை என்றுபதிலளித்ததும், குடிப்பதற்கு தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டான்.
வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்து அவனிடம் கொடுத்தார் ஜனா. தண்ணீர் டம்ளரை வாங்கும் சாக்கில்,அப்பெண்ணின் கழுத்தில் கிடந்த 7 சவரன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடினான் திருடன்.
ஆனால், மற்ற பெண்கள் போல பயந்து அலறி அங்கேயே நின்று கொண்டிருக்கவில்லை ஜனா. சங்கிலியுடன் ஓடியதிருடனை பின் தொடர்ந்து ஓடினார். "திருடன்... திருடன்... பிடிங்கள் என்று குரல் கொடுத்துக் கொண்டே அவனைவிரட்டினார்.
சாலையில் இக்காட்சியை கண்டதும் பொதுமக்கள் திரண்டு விட்டனர். அவர்களும் அப்பெண்ணுக்கு துணை வர,தைரியமாக திருடனை விரட்டினார் ஜனா. கடைசியில் தப்பிக்க முடியாமல் ஜனா கையில் சிக்கினான் திருடன்.அவனை பிடித்து இழுத்துச் சென்று சைதாப்பேட்டை போலீசில் ஒப்படைத்தார்.
போலீஸ் விசாரணையில் திருடன் பெயர் சவுந்தர் (வயது 24) என்றும், காஞ்சிபுரம் அருகே கேளம்பாக்கத்தைசேர்ந்தவன் என்றும், பல பெண்களிடம் தாலியை பறித்தவன் என்பதும் தெரியவந்தது.
திருடனை துணிச்சலுடன் விரட்டிச் சென்று பிடித்த ஜனாவை போலீசார் பெரிதும் பாராட்டினர்.