தமிழகத்தில் இன்று
பிஜி நாடாளுமன்றத்தைச் சுற்றி மக்கள் நடமாட தடை
வெலிங்டன்:
பிஜியில் இந்திய வம்சாவளி பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட பலர் பினைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற வளாகத்தைச்சுற்றிலும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு யாரும் நடமாடக் கூடாது என்று ராணுவம் தடை விதித்துள்ளது.
பிஜியில் மே 19-ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் புரட்சி நடந்தது. இதில் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட 26 பேர் சிறை பிடிக்கப்பட்டனர்.அதுமுதல் பிஜியில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிஜி சமூகத்தைச் சேர்ந்த கராசே புதிய பிரதமராகபதவியேற்றார்.
புதிய பிரதமர் பதவியேற்ற சில மணி நேரங்களில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே இருந்த ராணுவ வீரர்களுக்கும், புரட்சிக்காரர்களுக்கும்இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் பல புரட்சிக்காரர்கள் காயம் அடைந்தனர். இந்தச் சூழ்நிலையில் இரண்டு நாட்களுக்குள் பினைக் கைதிகள்அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று புதிய அரசு கெடு விதித்தது.
தற்போது இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 5.30 மணி முதல் நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றிலும் யாரும் நடமாடக் கூடாது என்று ராணுவம்தடை விதித்துள்ளது. ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு இந்தத் தடை அமலில் இருக்கும். வளாகத்தைச் சுற்றிலும் பல சோதனைச் சாவடிகள்அமைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் எத்தனை புரட்சிக்காரர்கள் இருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை. நியூஸிலாந்து டி.வியில் 600 முதல் 800பேர் வரை இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஸ்பீட் தரப்பில் 1000 முதல் 2000 பேர் வரை இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றிலும் ராணுவப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்களிலும், நடமாடியும் ராணுவம் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டு வருகிறது. நள்ளிரவுக்கு மேல் யார் நடமாடினாலும் கைது செய்யப்படுவர் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் பிலிப்போ தராகினிகினிகூறியுள்ளார்.
இருப்பினும் புரட்சிக்காரர்கள் மீது அதிரடி நடவடிக்கை ஏதும் எடுக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என அவர் தெரிவித்தார்.
ஸ்பீட் ஆத்திரம்:
நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் அளவுக்கு நடமாட்டமல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு ஸ்பீட் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்து ரேடியோவுக்கு அவர் அளித்த பேட்டியில், இது தேவையில்லாதது. தற்போதைய ராணுவத்தின் முடிவு, லெபனான் மற்றும் கொசாவோவைஞாபகப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.