தமிழகத்தில் இன்று
பிஜி நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியனர் புரட்சியாளர்கள்
சுவா:
பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்பட 27 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள புரட்சிப்படையினரின் ஆதரவாளர்கள் சிலர் நாடாளுமன்றக் கட்டடத்தைவிட்டு வெள்ளிக்கிழமை வெளியேறினர்.
பிஜி தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் புரட்சிப் படையினர், கடந்த மே 19-ம் தேதி பிஜி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து பிரதமர் உள்பட பலரைபிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர்.
அதன் பிறகு, பிஜியில் ராணுவ ஆட்சி ஏற்பட்டது. ராணுவத்துக்கும், பிணைக் கைதிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பிணைக்கைதிகளில் பலர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், பிரதமர் உள்பட 27 பேர் விடுவிக்கப்படவில்லை.
பிஜியில் பிஜி நாட்டவர்களைக் கொண்ட அரசு ஏற்படும் வரை அவர்களை விடுவிக்கமாட்டோம் என்று புரட்சிப்படையினர் கூறிவிட்டனர். இந் நிலையில்,சில நாட்களுக்கு முன்பு முழுவதும் பிஜி நாட்டவர்களைக் கொண்டு புதிய அரசு ஏற்படுத்தப்பட்டது. இந்தியர்கள் யாரும் அதில் இடம் பெறவில்லை.
புதிய ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு, புரட்சிப் படையினருக்கு ராணுவ அரசு இரண்டு நாள் கெடு விதித்தது. பிணைக் கைதிகள் அனைவரையும்விடுவிக்கவேண்டும். ஆயுதங்களை ஒப்படைத்து நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று ராணுவம் கூறியது.
வெள்ளிக்கிழமை இரவுடன் கெடு முடிவடைய உள்ள நிலையில், புரட்சிப் படையினரின் ஆதரவாளர்கள் சிலர் நாடாளுமன்றக் கட்டடத்தை விட்டுவெள்ளிக்கிழமை வெளியேறினர்.
நாடாளுமன்றத்தில் இன்னும் 80-க்கும் அதிகமான புரட்சிப்படையினரின் ஆதரவாளர்கள் இருப்பதாகவும், அவர்கள் சோர்ந்துவிட்டதாகவும் ராணுவஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரண்டு நாள் கெடுவுக்குள் புரட்சிக்காரர்கள் வெளியேறவில்லை என்றால் நாடாளுமன்ற கட்டடத்துக்கான மின் இணைப்பு, குடிநீர் சப்ளை போன்றஅத்தியாவசிய இணைப்புகளை துண்டித்து விடுவதாக ராணுவம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.