தமிழகத்தில் இன்று
பிஜியில் புரட்சியாளர்களின் ஆதரவாளர்கள் அட்டூழியம்
கோரோவூ (பிஜி):
பிஜி நாட்டில் புரட்சிப் படையினரின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். சில போலீஸ் அதிகாரிகள் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்களைஅவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளன்.
தென் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சிறிய நாடான பிஜியில் கடந்த மே 19-ம் தேதி புரட்சி ஏற்பட்டது. பிஜி தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில்நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த புரட்சிப் படையினர் பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்பட பலரை சிறைப் பிடித்தனர்.
அதன் பிறகு பிஜியில் ராணுவ ஆட்சி ஏற்பட்டது. ராணுவத்துக்கும், புரட்சிப் படையினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து பிணைக்கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்பட 27 பேர் விடுவிக்கப்படவில்லை.
பிஜியில் புதிய அரசு அமைக்கவேண்டும். அது முழுக்க முழுக்க பிஜி நாட்டவர்களைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்று ஜார்ஜ் ஸ்பீட் அறிவித்தார்.அதன்படி பிஜியில் புதிய அரசு நியமிக்கப்பட்டது. இந்தியர்கள் யாரும் இல்லாத முழுவதும் பிஜி நாட்டவர்களைக் கொண்ட அரசு பதவியேற்றது.
அதன்பிறகும் பிணைக் கைதிகளை புரட்சிப்படையினர் விடுவிக்கவில்லை. இதையடுத்து அவர்களுக்கு 2 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டது.வெள்ளிக்கிழமை இரவுடன் அந்த 2 நாள் அவகாசமும் முடிந்தது. அவகாசம் முடிய சிறிது நேரம் இருந்தபோது புரட்சிப்படையினரின் ஆதரவாளர்கள் சிலர்மட்டுமே நாடாளுமன்றக் கட்டடத்தை விட்டு வெளியேறினர்.
ஆனால், சுமார் 180-க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் நாடாளுமன்ற கட்டடத்துக்குள் உள்ளன. இந் நிலையில், பிஜியில் வெள்ளிக்கிழமை இரவுமுதல் புரட்சிப் படையினரின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சனிக்கிழமை காலை, கோரோவூ நகரில் உள்ள போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்த புரட்சிப்படையினரின் ஆதரவாளர்கள் சுமார் 150 பேர், அங்கிருந்தபோலீஸ் அதிகாரிகள் உள்பட மேலும் சிலரை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டுள்ளனர். மேலும், அங்கிருந்த துப்பாக்கிகளையும் அவர்கள்பறித்துக் கொண்டனர்.
இது தவிர, நகரத்தின் பல பகுதிகளிலும் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர்.
பிஜியில் இந்திய வம்சாவழியினரிடம் உள்ள நிலங்களையும் மீட்டு அவற்றை பிஜி நாட்டவர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று புரட்சிப் படையினர்தற்போது புதிய கோரிக்கையை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications