தமிழகத்தில் இன்று
ராமதாஸை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்கிறார் வாழப்பாடி
சென்னை:
இந்தியா என்றொரு நாடே இல்லை. இந்தியன் என்றொரு இனமும் இல்லை என்பதை பாட்டாளி மக்களின் கட்சியின் கொள்கை விளக்கப் புத்தகமாகவெளியிட்ட ராமதாஸை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கவேண்டும் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடிராமமூர்த்தி கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
ஒகேனக்கல்லில் பாமகவின் பேச்சாளர்களின் பயிற்சி முகாம் ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. கட்சி நிறுவனர் ராமதாஸ், இப் பயிற்சிமுகாமில் கலந்து கொண்டு பயிற்சி அளித்துள்ளார்.
அந்த முகாமில் பாமக கொள்கை விளக்க அணி சார்பில் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்கள் அடங்கியதுதான்ஒரு நாடு. அந்த அடிப்படையில் இந்தியா ஒரு தேசமன்ற. பல தேசங்களைக் கொண்ட ஒரு நாடு.
காரணம், ஒரு தேசத்துக்கென பொதுவான மொழியும், பொதுவான வாழ்க்கை முறையும் இருக்கவேண்டும். இந்தியாவுக்கு அப்படி ஏதும் இல்லை. பலமொழிகள் பேசும் தேசங்களைக் கொண்ட நாடு இது.
இங்கு இந்தியா என்றொரு மொழியும் இல்லை. இந்தியன் என்ற இனமும் இல்லை. எனவே இன்தியா என்றொரு நாடும் இல்லை.
ஆகவே, தன்னுரிமை பெற்ற தமிழ் தேசிய குடியரசு உடனடியாக அமைக்கப்படவேண்டும். அதற்கு குடியுரிமை வழங்கும் அதிகாரம் உள்பட எல்லாஉரிமைகளும் வழங்கப்படவேண்டும்.
இந்திய அரசு என்பது பெரும் முதலாளிகளின் தலைமையிலான பார்ப்பனீய இந்திய ஆதிக்க அரசாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பல தேச விரோத கருத்துக்களைக் கொண்டது அப் புத்தகம். இந்திய அரசையும், ஒட்டுமொத்த இந்தியாவையும் ஏற்றுக் கொள்ளாத ராமதாஸ்இன்னும் மத்திய அமைச்சரவையில் நீடிக்கக்கூடாது.
தமிழ் தேசம், தன்னுரிமை என்று பிரிவினை கேட்கும் ராமதாஸை இனியும் மத்திய அரசு விட்டு வைக்கக்கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
அதேபோல், சென்னையில் உள்ள தலைமைச் செயலகக் கோட்டையை அவமதித்து அழைப்பிதழ் வெளியிட்டது பற்றியும், இது போன்ற பிரிவினை வாதகொள்கைகள் அடங்கிய புத்தகம் பற்றியும் தமிழக முதல்வர் கருணாநிதியிடமும் கூறியுள்ளேன்.
ஏற்கெனவே இப்படி தமிழ் தேசம் கேட்டு தமிழ் தேசிய மீட்புப் படை என்ற தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வந்தது. அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்அனைவரும் தடா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் ராமதாஸையும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கவேண்டும். விடுதலைப் புலிகளின் லட்சியமான அகண்ட தமிழகம்திட்டப்படியே ராமதாஸ் செயல்படுகிறார் என்பது இப்போது வெளிச்சமாகிவிட்டது.
ஏற்கெனவே புலிகளிடம் ரூ.35 லட்சம் வாங்கிக் கொண்டு தமிழர் தன்னுரிமை மாநாடு நடத்தியவர் ராமதாஸ் என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.