தமிழகத்தில் இன்று
கூடுதல் கட்டணம் குறித்து ஏ.ஐ.சி.டி.ஈ.யில் புகார் செய்யலாம்
சென்னை:
தனியார் பொறியியல் கல்லூரிகள், அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கூடுதலாக மாணவர்களிடம் வசூலித்தால், அதுபற்றி அகில இந்திய தொழில்கல்வி கவுன்சிலிடம் (ஏ.ஐ.சி.டி.ஈ) மாணவர்கள் புகார் செய்யலாம்.
புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகில இந்திய தொழில் கல்வி கவுன்சிலின் தென் மண்டல இயக்குனர் சுதர்னம்தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் கட்டண வகுப்பில் சேரும் மாணவர்களிடம் இருந்து எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றுஅரசு நிர்ணயம் செய்துள்ளது.
அதை விட அதிக கட்டணத்தை வசூலித்தால் அது பற்றி சம்பந்தப்பட்ட மாணவர்களும், பெற்றோர்களும் அகில இந்திய தொழிற்கல்வி கவுன்சலிடம்எழுத்து மூலம் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்கள் கையெழுத்திடப்பட்ட புகார்களாக இருக்க வேண்டும்.
அகில இந்திய தொழிற்கல்வி கவுன்சிலின் அனுமதியை பெறாமல், ஒற்றை சாளர முறைக்கு வெளியே கூடுதல் இடங்களை (ஸ்பான்சர்டு சீட்ஸ்) அண்ணாபல்கலைக் கழகம் இந்த ஆண்டு முதல் அளிக்க திட்டமிட்டுள்ளது பற்றி அண்ணா பல்கலைக்கழகத்துடன் பேசுவோம்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் புதிய பொறியியல் கல்லூரிகள் துவங்கப்படுவதற்கு, அகில இந்திய தொழிற் கல்வி கவுன்சில் அனுமதிக்கும்.இந்த ஆண்டு எந்த கல்லூரிக்கும் அனுமதி அளிக்கவில்லை. சென்ற ஆண்டு எங்களிடம் அனுமதி பெற்று, பொறியியல் கல்லூரியை துவங்க முடியாதவர்கள்தான் இந்த ஆண்டில் துவங்குகின்றனர்.
பொறியியல், பாலிடெக்னிக், பி.பார்ம், எம்பிஏ, எம்சிஏ, ஹோட்டல் மேனேஜ்மென்ட், கட்டடக்கலை ஆகிய 7 படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் தேவை. இந்த அங்கீகாரம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற 500 கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீட்டிப்பது பற்றி முடிவுசெய்ய, எங்கள் நிபுணர்கள் குழு கடந்த 3மாதங்களாக இந்த 500 கல்லூரிகளையும் பார்வையிட்டது. அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அங்கீகாரம் நீட்டிப்பு பற்றிய முடிவு, பொறியியல்கல்லூரிகளில் சேர்க்கைக்கான கவுன்சிலிங் துவங்கும் முன்பே அறிவிக்கப்பட்டு விடும்.
கல்லூரியின் தரம் திருப்திகரமாக இல்லாவிட்டால், நாங்கள் கொடுத்த அங்கீகாரத்தை திரும்பப் பெறுவோம். ஒரு பொறியியல் கல்லூரிஅங்கீகரிக்கப்பட்டதா, கல்லூரியில் அளிக்கப்டும் எந்தெந்த பிரிவுகள் அங்கீகரிக்கப்பட்டவை, எத்தனை மாணவர்களை சேர்த்துக் கொள்ள அனுமதிதரப்பட்டுள்ளது போன்ற விவரங்களை www.aicte.com என்ற வெப்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்என்றார் அவர்.