தமிழகத்தில் இன்று
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண விரைவில் முத்தரப்புப் பேச்சு
கொழும்பு:
இலங்க்ை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு, ஆளுங்கட்சி, முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கைத் தமிழர்கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை விரைவில் நடத்தப்படும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
இதுவரை அரசியல் சட்டத் திருத்தம், தமிழர் பிரச்சினைக்கான தீர்வு காண்பது தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவைமட்டுமே பேசி வந்தன. தற்போதுதான் முதல் முறையாக தமிழ் கட்சிகளும் பேச்சுவார்த்தையில் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் தருவது தொடர்பாக, ஆளுங்கட்சிக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை ஏற்கமுடியாது என்று ஏற்கனவே தமிழர் கட்சிகள் கூறி விட்டன. வட கிழக்கு மாகாணம் அமைப்பது தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தக் கூடாது என்றுதமிழர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அதிபர் சந்திரிகாவுடன் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தமிழர் ஐக்கிய முன்னணிக் கட்சி, அரசியல் தீர்வு தொடர்பாக எந்தவிதசமரசத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ரொம்பவே இறங்கி வந்து விட்டோம். இதற்கு மேலும் இறங்கி வர முடியாது. தமிழர்களின்உணர்வுகளைப் புறக்கணிக்கும் வகையில் இப்போதைய அரசியல் தீர்வுத் திட்டம் உள்ளதாக அக்கட்சி கூறியுள்ளது.
மேலும், விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பின்றி எந்த அரசியல் தீர்வையும் காண முடியாது. இப்பிரச்சினையில் விடுதலைப் புலிகளும் ஒரு முக்கிய கட்சி.அவர்களைப் புறக்கணிப்பது இயலாத காரியம் என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதே கருத்தையே ஈ.பி.டி.பி., பிளாட் ஆகிய தமிழ் கட்சிகளும் வெளிப்படுத்தியுள்ளன.
இதற்கிடையே தமிழ் கட்சிகள் அரசியல் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும்கூட, அதிபர் சந்திரிகா அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு இருப்பதால், அரசியல் சட்டத் திருத்தத்தை எளிதாகநாடாளுமன்றத்தில் நிறைவேற்றலாம் என்று அவர் நினைப்பதாகத் தெரிகிறது.
யு.என்.ஐ.