ஹார்முஸ் ஜலசந்தியில் 20% கட்டணம் வசூலிக்கும் திட்டம்! அந்தர் பல்டி அடித்த டிரம்ப்! பின்னணி என்ன?
வாஷிங்டன்: உலகின் 20 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் முக்கிய கடல் போக்குவரத்து பாதையாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இருப்பதாக கூறிய டிரம்ப், இந்த வழியாக செல்லும் கப்பல்களுக்கு 20 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும் என்றார். அமெரிக்காவின் இந்த முடிவுக்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனது முடிவில் இருந்து டிரம்ப் பின் வாங்கியுள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் மோதல் முற்றியுள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இஸ்ரேலும் இதில் இணைந்து கொண்டது. ஈரான் மீது இருநாடுகளும் இணைந்து தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் பதிலடி கொடுத்தது.

பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்த நிலையில், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்தத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை. ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்கியதை காரணம் காட்டி அமெரிக்கா, ஈரானை தாக்கியது. இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும் ஈரான் மீது தாக்குதல் தொடரும் என அமெரிக்க அறிவித்தது.
இதனால், கடந்த சில தினங்களாக ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்கி வருகிறது. இதனால், அமெரிக்கா கடும் கோபம் அடைந்துள்ளது. இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் கப்பல்களுக்கு 20 சதவீதம் வரி விதிக்க டிரம்ப் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.
டிரம்பின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து, தனது முடிவில் இருந்து டிரம்ப் பின் வாங்கியுள்ளார். இது குறித்து தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்தினோம். இந்த ஆலோசனைக்கு பிறகு 20 சதவீதம் சுங்க கட்டணம் வசூலிக்கும் முடிவை கைவிட்டுள்ளோம்.
இதற்கு பதிலாக வளைகுடா நாடுகள், அமெரிக்காவில் மேற்கொள்ளவிருக்கும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை அமல்படுத்த முடிவு செய்து இருக்கிறேன். இந்த முதலீடு மிகெபெரிய அளவிலாக இருக்கும். இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அவர்களுடைய எதிர்காலத்திற்கும் மிகப்பெரிய அளவில் நன்மை பயக்கும் ஒன்றாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications