தமிழகத்தில் இன்று
ரூ.220 கோடியில் நவீனமாக்கப்படுகிறது ஆவின் நிறுவனம்
சென்னை:
தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தை நவீனப்படுத்தும் திட்டம் தேசிய பால் வள வாரியத்தின் உதவியுடன்ரூ.220 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் சுந்தரம் தெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தை நவீனமயமாக்குவதற்காகன திட்டம் ரூ.220 கோடியில் செயல்படுத்தப்படஉள்ளது. இந்த திட்டத்துக்கு 220 கோடி ரூபாய் கடனுதவி கேட்டு குஜராத்தில் உள்ள தேசிய பால் வளவாரியத்திடம் விண்ணப்பித்தோம்.
இதற்காக அமைச்சர்கள் தா.கிருஷ்ணன், பொன்முடி ஆகியோருடன் நானும் குஜராத் சென்று, தேசிய பால் வளவாரியத் தலைவர் அமிர்தா படேலை சந்தித்தோம். இந்த திட்டம் பற்றி எடுத்துக் கூறினோம். அதன்படி தமிழகத்தின்கோரிக்கையை ஏற்று ரூ.220 கோடி கடனுதவி அளிக்க தேசிய பால் வள வாரியம் முன் வந்துள்ளது.
முதல் கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை கொண்டு சென்னை மாவட்டத்தில் உள்ளஆவின் நிறுவனத்தை நவீனப்படுத்த திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக ஆவின் விற்பனையை பெருக்கத்திட்டமிட்டுள்ளோம்.
அதன் பின்னர் தேசிய பால் வள வாரியத்தின் குழு ஒன்று செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தமிழகம் வந்து இத்திட்டம்பற்றி ஆய்வு செய்யும். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 28-ம் தேதி, அமிர்தா படேல் சென்னை வந்து முதல்வரைச்சந்தித்துப் பேசுகிறார்.
இந்த புதிய திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆவின் செயல்பாடுகளை நவீனப்படுத்துவதுடன்,விற்பனையையும் பெருக்க முடிவு செய்துள்ளோம்.
சென்னைக்கு வெளியே திருச்சியில் ஒரு ஐஸ் கிரீம் தொழிற்சாலையை அமைக்க உள்ளோம். தென்மாவட்டங்களுக்கான சேவையை அந்த ஆலை கவனித்துக் கொள்ளும்.
மேலும் மொரப்பூர், போளூர், சங்ககிரி, தலைவாசல், விளாங்குடி ஆகிய 5 இடங்களில் பால் குளிரூட்டும்நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
தற்போது ஆவினுக்கு தினசரி 18 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் 16 லட்சம் லிட்டர்விற்பனை ஆகிறது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, 26லட்சம் லிட்டர் விற்பனை செய்ய முடியும் என்றார் அமைச்சர்.
பேட்டியின் போது அமைச்சர் பொன்முடி உடனிருந்தார்.