தமிழகத்தில் இன்று
"ஆளை விடுங்கள்" ... நிருபர்களிடமிருந்து நழுவிய அஸார்
லண்டன்:
மேட்ச் பிக்ஸிங் குறித்து இந்தியாவில் நடைபெறும் சம்பவங்கள் பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். எதுவும் சொல்லக்கூடிய நிலையில் நான் இல்லைஎன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஸாருதீன் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சமீப காலமாக புகார்கள் எழுந்தன.
முதலில் இத்தகைய புகாரைத் தெரிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர். 3 ஆண்டுகளுக்கு முன்பே இந்த புகாரைகூறியிருந்தாலும், மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டது யார் என்பதை சமீபத்தில்தான் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மோசமாக விளையாடினால் எனக்கு ரூ. 25 லட்சம் லஞ்சம் தருவதாக கபில் தேவ் கூறியதாக மனோஜ் பிரபாகர்தெரிவித்தார். தனது இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக சில வீரர்களின் பெயர்களை அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹான்சி குரோனியே பிடிபட்டார். இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
எனக்கு மேட்ச் பிக்ஸிங் பற்றி எதுவும் தெரியாது. இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் புக்கியை (சூதாட்டக்காரர்) அஸாருதீன்தான் என்னிடம்அறிமுகப்படுத்தினார் என்று கூறினார்.
இதையடுத்து மேட்ச் பிக்ஸிங் தொடர்பான புகார்கள் இந்திய கிரிக்கெட் உலகில் பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியது. மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக மத்தியஅரசு உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இந் நிலையில், சில நாட்களுக்கு முன் கபில்தேவ், அஸாருதீன், ஜடேஜா, மோங்கியா, ஜக் மோகன் டால்மியா உள்ளிட்டவர்களுடைய வீரர்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
இரு நாட்கள் நடந்த இச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள், கணக்கில் காட்டப்படாத லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
இச் சோதனை பற்றி கருத்து தெரிவிக்க கிரிக்கெட் வீரர்கள் மறுத்துவிட்டனர். சோதனை நடத்தப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் யாரையும் சந்திக்கமுடியாததும், செய்தியாளர்களைச் சந்திப்பதை அவர்கள் தவிர்த்ததும்தான் காரணம்.
இந் நிலையில், லண்டனில் வடக்குப் பகுதியில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மார்க் ராம்பிரகாஷுக்கான நலநிதி கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டவந்திருந்தார் அஸாருதீன். அங்கு செய்தியாளர்களிடம் அவர் சிக்கினார்.
மைதானத்தில் இருந்த நேரத்தில் மனைவி சங்கீதா மற்றும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாஸிம் அக்ரம் ஆகியோரிடம்தான் அவர் அதிகம் பேசிக்கொண்டிருந்தார். இடையில் கிடைத்த சிறிது நேரத்தில் அவரிடம் செய்தியாளர்கள் பேசினர்.
சிபிஐ விசாரணை, வருமான வரித்துறை ரெய்டு ஆகியவை பற்றி கேட்டனர்.
மேட்ச் பிக்ஸிங் பற்றி எனக்குத் தெரிந்த அனைத்து தகவல்களையும் அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டேன். மேலும் இது பற்றி வெளியில் யாரிடமும் எதுவும்சொல்லமாட்டேன் என்று அவர்களிடம் கூறியிருக்கிறேன்.
மேட்ச் பிக்ஸிங் குறித்து இன்னும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேட்ச் பிக்ஸிங் பற்றி சொல்ல நான் விரும்பினாலும், சொல்ல முடியாதவாறுநான் தடுக்கப்பட்டிருக்கிறேன்.
ஆகவே இப்போதைய நிலையில், ஏதையும் சொல்லும் நிலையில் நான் இல்லை. என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்.
செப்டம்பர் மாதம் டொரான்டோவில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்றார்அஸாருதீன்.
யு.என்.ஐ.