தமிழகத்தில் இன்று
இந்தியத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க எதிர்ப்பு
கொழும்பு:
இலங்கையில் வசிக்கும்இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க இலங்கையிலுள்ள சிங்கள தேசியக் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையிலுள்ள தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களில் இந்தியாவிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக அழைத்து வரப்பட்ட தமிழர்கள்பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இலங்கை அரசு குடியுரிமை வழங்காமல் உள்ளது. சுமார் 5 லட்சம் தமிழர்கள் இவ்வாறு குடியுரிமை இல்லாமல்உள்ளனர்.
இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் கட்சி நீண்ட காலமாக கோரி வருகிறது. இந்நிலையில்வம்சாவளித் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதற்கு சிங்களத் தலைவர்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது. சிங்கள உருமாய கட்சித் தலைவர் எஸ்.எல்.குணசேகரா கூறுகையில், அடுத்த மாதம் நாடாளுமன்றத்தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் பங்கேற்கும் வகையில் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி சுமார் 4 லட்சம் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதை வன்மையாக எதிர்க்கிறோம். இவர்களுக்குஇலங்கைக் குடியுரிமை அளித்தால் இலங்கைக்கு பிஜி தீவில் ஏற்பட்டுள்ளது போன்ற அவல நிலை ஏற்படும்.
பிஜியில் வாழும் இந்தியர்கள் பொருளாதாரத்திலும், அரசியலிலும் உயர்வான நிலையில் உள்ளனர். இந்தியர்களுக்கு ஆட்சிப் பொறுப்பு தரக்கூடாது என்று பிஜிஇனத்தவர் போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கினால் பிஜி தீவைப்போன்ற பிரச்சனையைச் சந்திக்கும் அபாய நிலைக்குஇலங்கை தள்ளப்படும்.
இலங்கையின் மத்தியப் பகுதியில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த தமிழர்கள் தேயிலை மற்றும் ரப்பர் தொழில் செய்து வருகின்றனர். அவர்களுக்குக்கிடைக்கும் வாய்ப்புக்களில் பாதிகூட இங்கு வாழும் சிங்களத் தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை என்றார்.
இதற்கிடையே சிலோன் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி எம்.பி. யோகராஜன் கூறுகையில், பல்வேறு எதிர்ப்புக்களுக்கு இடையில் புதிய அரசியல் சட்டதிருத்தத்தை அமல்படுத்த அதிபர் சந்திரிகா திட்டமிட்டுள்ளார். இந்தியாவிலிருந்து இங்கு வந்து வாழும் தமிழர்களுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கக் கோரிசிலோன் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
புதிய அரசியல் சட்ட திருத்தத்தின்படி இங்கு வாழும் தமிழர்களுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்படும்.
சிங்கள உருமாய கட்சியினர் 4 லட்சம் தமிழர்கள் இலங்கைக் குடியுரிமைக்காகக் காத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர். இது தவறு. 2 லட்சம்தமிழர்களுக்கு மட்டுமே குடியுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றார் யோகராஜன்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications