தமிழகத்தில் இன்று
விஜயலட்சுமியின் "சாதனைப் படிகள்"
சென்னை:
இந்தியாவின் முதல் பெண் செஸ் கிரான்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்றுள்ள விஜயலட்சுமி சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் இரண்டாம் நிலை வீரரான விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு சென்னையைச் சேர்ந்த ஒருவர் இந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
21 வயதான விஜயலட்சுமி, 4 முறை தேசிய சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். இவர் கிரான்ட்மாஸ்டர் பட்டம் பெற பல படிகளை ஏறி வந்துள்ளார்.
மூன்றரை வயதிலிருந்தே செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டு விளையாடி வருகிறார் விஜயலட்சுமி.
கிரான்ட்மாஸ்டர் ஆவதற்கான தகுதிப் புள்ளிகளை 1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்போட்டியிலிருந்து அவர் பெற்று வந்தார்.
ஸ்பெயின் லினாரெஸ் சாம்பியன்ஷிப் போட்டி, உதய்பூரில் நடைபெற்ற ஆசிய பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டி என அனைத்திலும் சிறப்பாக விளையாடி புள்ளிகள்பெற்றார்.
இப்போது ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் விளையாடி தேவையான புள்ளிகளைப் பெற்று இப்போது கிரான்ட்மாஸ்டராகியுள்ளார்.
தேசிய அளவில் 10 வயது, 12 வயது, 15 வயது, 16 வயது, 18 வயது, 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவுகளில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.1999-ல் தேசிய பி சாம்பியன் பட்டத்தையும், தேசிய ஜூனியர் பெண்கள் பட்டத்தையும் அவர் வென்றார்.
1994-ல் மலேஷியாவில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் 5-ம் இடம் பெற்றார். 1998-ல் 3-ம் இடம்பெற்றார்.
1999-ல் ஆசிய பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் அணிகளுக்கான பிரிவில் இந்திய அணிக்குத் தலைமையேற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத்தந்தார்.
விஜயலட்சுமியின் அடுத்த இலக்கு ஆண்களுக்கான பிரிவில் சர்வதேச மாஸ்டர் பட்டம் பெறவேண்டும் என்பதுதான் என்று அவரது சகோதரி கூறியுள்ளார்.ஏற்கெனவே இப் பிரிவில் 2 தகுதி நிலைகளை அவர் எட்டியுள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் கிரான்ட்மாஸ்டராக ஆகியுள்ள தனக்கு ஒரே குறிக்கோள் பெண்கள் பிரிவில் உலக சாம்பியன் ஆக வேண்டும் என்பதுதான்என்கிறார் விஜயலட்சுமி.
வாழ்த்துக்கள் விஜி...!
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications