தமிழகத்தில் இன்று
மீண்டும் கிரிக்கெட் வீரர்களின் "சிண்டைப் பிடிக்கிறது சி.பி.ஐ
டெல்லி:
வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை முடிந்தபிறகு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று மத்தியபுலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பலர் மேட்ச் பிக்ஸிங்கில்ஈடுபட்டு லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக சமீப காலத்தில் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக மத்திய அரசு உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந் நிலையில், கடந்த 19 மற்றும் 20-ம் தேதிகளில் கபில்தேவ்,ஜடேஜா, அசாருதீன் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வாரிய அதிகாரிகள், கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் ஆகியோரது வீடுகள்மற்றும் அலுவலகங்களில் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது.
இது தவிர, அவர்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இரண்டு நாட்களில் நாடு முழுவதும் சுமார் 94இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. பல கிரிக்கெட் வீரர்களுடைய சுமார் 17 வங்கி லாக்கர்கள் சீல் வைக்கப்பட்டன.
திங்கள்கிழமையிலிருந்து வங்கி லாக்கர்கள் ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டு அதற்குள் இருந்த ஆவணங்கள், பணம் உள்ளிட்டவை குறித்து வருமானவரித்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இது தவிர, சில கிரிக்கெட் வீரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், டைரிகள் ஆகியவை குறித்தும் விசாரிக்கப்பட்டுவருகிறது.
இந் நிலையில், தான் கைப்பற்றிய பொருட்கள் பற்றி வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை முடிந்த பிறகு கிரிக்கெட் வீரர்கள் மற்றும்அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ அறிவித்துள்ளது.
கைப்பற்ற ஆவணங்கள் பற்றி இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் மேட்ச் பிக்ஸிங்கில் சிலர் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது. ஆகவே, மேட்ச் பிக்ஸிங்குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.
அந்த நபர்களிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டிருந்தாலும், மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும். தேவைப்படும் பட்சத்தில் சிபிஐஅலுவலகத்துக்கு அவர்கள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும்.
கைப்பற்ற ஆவணங்கள் பற்றி விசாரணை நடத்தி வரும் வருமான வரித்துறை அதிகாரிகள் விரைவில் தங்களது விசாரணையை முடித்து அந்த ஆவணங்களைசிபிஐயிடம் ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சிபிஐ நடத்தி வரும் விசாரணைக்கு இந்த ஆவணங்கள் பெரிதும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதுவரை சிபிஐநடத்தியுள்ள விசாரணையில் முக்கிய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ விசாரணைக்கு உள்ளான கிரிக்கெட் வீரர்களும், அதிகாரிகளும் மேட்ச் பிக்ஸிங் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர்.அதனால், அவர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்களைத் திரட்ட சிபிஐயால் முடியவில்லை.
தற்போது கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் கைப்பற்ற ஆவணங்களைப் பற்றி வருமான வரித்துறை விசாரித்து வரும் நிலையில், சிபிஐதனது விசாரணையில் முனைப்பு காட்டாமல் உள்ளது.
வருமான வரித்துறையினரின் விசாரணை முடிந்த பிறகு சிபிஐ விசாரணை தீவிரமாகும் என்று கூறப்படுகிறது.
யு.என்.ஐ.