தமிழகத்தில் இன்று
சென்னை, பெங்களூர் கிரிக்கெட் பிரபலங்கள் வீட்டில் வருமான வரி சோதனை
பெங்களூர்:
கிரிக்கெட் விளையாட்டில் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சென்னை மற்றும் பெங்களூரில் 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
கடந்த வாரம் கபில்தேவ், அஸாருதீன், ஜடேஜா, ஜக்மோகன் டால்மியா உள்ளிட்ட பலருடைய வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் பெங்களூரில் சுமார் 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறிய வருமான வரித்துறையின் விசாரணைப் பிரிவு அதிகாரி கே.கே.சர்மா, யார் யாருடைய வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இச் சோதனையில் சிபிஐ அதிகாரிகள் யாரும் பங்கு கொள்ளவில்லை. சென்னையிலும், பெங்களூரிலும் காலை முதல் மாலை வரை சோதனைமேற்கொண்டதாக சர்மா தெரிவித்தார்.
லண்டனில் சிபிஐ குழு
இதற்கிடையே, மேட்ச் பிக்ஸிங் குறித்து விசாரித்து வரும் சிபிஐயின் உயர் மட்டக் குழு லண்டன் சென்றுள்ளது.
சிபிஐயின் இணை இயக்குநர் ஆர்.என். சவானி மற்றும் டிஐஜி ஒய்.பி. சிங் ஆகிய இருவரும் 5 நாள் பயணமாக புதன்கிழமை லண்டன் சென்றனர்.
மேட்ச் பிக்ஸிங் தொடர்பான முக்கிய ஆதாரங்களைத் திரட்டுவதற்காக இருவரும் லண்டன் சென்றுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர்கள் இருவரும் இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார்கள் என்று தெரிகிறது.
யு.என்.ஐ.