தமிழகத்தில் இனிமேல் 1:30
சென்னை:
பள்ளிக்கூடங்களில் முப்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் 15-வது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நடந்தது.
மாநாட்டிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார்.
மாநாட்டில் பேசிய முதல்வர் கருணாநிதி, மாணவர் ஆசிரியர் விகிதத்தை மாற்றுவது பற்றி கடந்த மன்ற மாநாட்டிலும் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
முப்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதில் எனக்கோ, பேராசிரியருக்கோ (கல்வி அமைச்சர் அன்பழகன்)கொள்கையளவில் இரண்டுபட்ட கருத்துக்கள் கிடையாது.
1:30 என்பதை கொள்ளையளவில் நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். கொள்ளையளவில் ஏற்றுக்கொண்டதெல்லாம் உடனே நிறைவேறிவிடும்என்று பொருளும் அல்ல. மாநில சுயாட்சியை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். நாளைக்கே நிறைவேறி விடுமா என்ன?நிறைவேறினாலும் மகிழ்ச்சியே.
1:30 என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனாலுங்கூட இப்பொழுதுள்ள பொருளாதார நிலையில் 1:30 என்கிற நிலையை உருவாக்கினால்அதற்கு முந்நூறு கோடி ரூபாய்க்கு மேல் கல்வித்துறைக்கு செலவாகும்என நான் கடந்த மாநாட்டிலேயே சொல்லியிருக்கிறேன்.
ஏற்கனவே 11-வது நிதிக்குழு செய்துள்ள ஒரவஞ்சகம் காரணமாக தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் சுமார் 900 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்நிலை ஏற்பட்டுள்ளது என்று பேசினார் முதல்வர் கருணாநிதி.