சென்னை அருகே ரூ. 20 கோடியில் சர்வ மதக் கோவில்
சென்னை:
சென்னை அருகில் ரூ.20 கோடி செலவில் அனைத்து மத கோவில்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் இ.வி.பி. பொறியியல் கல்லூரி வளாகத்தில் 75 ஏக்கர் பரப்பில் 20 கோடி ரூபாய் செலவில் அனைத்துமதக் கோவில்கள் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் கோவில் வரத எதிராஜ ஜீயர், காஞ்சிபுரம் ஸ்ரீவாதகேசரி அழகிய மணவாள ஜீயர், திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர், திருவேற்காடுஐயப்ப சுவாமிகள், சுதர்சன ஆச்சாரியார் சுவாமிகள், குமாரவாடி ராமானுஜாச்சாரி சுவாமிகள் ஆகியோர் மங்களாசாசனத்துடன் அடிக்கல் நாட்டி ஆன்மீகஉரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் வை.மூர்த்தி, தெலுங்கர் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் காமாட்சி, முன்னாள் எம்.எல்.ஏ. சைதைதுரைசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலயத்தில் தேவலோக ரிஷிபீடம் 108 திவ்யதேச சன்னதிகள் கட்டுவதற்கும், 51 இந்து கடவுள்கள், புத்த, சமண, கிறிஸ்தவ, இஸ்லாமியம்உள்ளிட்ட அனைத்து மத ஆலயங்களும் இன்னும் ஒன்றரை ஆண்டில் கட்டி முடிக்கப்படும்.
மக்கள் அனைவரும் அமைதியுடனும், இன்பமாகவும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இக்கோயில்கள் ஒரே இடத்தில் கட்டப்படுகின்றனஎன்று அறக்கட்டளை தலைவர் இ.வி.பி.பெருமாள், சுவாமி ரிஷி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.