அடை மழையால் அழுகிறது ஆந்திரம் ...130 பேர் பலி
ஹைதராபாத்:
ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை மற்றும் வெள்ளத்துக்கு இதுவரை 130 பேர் பலியாகியுள்ளனர். பயிர்கள் மற்றும் சொத்துக்களுக்குப்பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஆந்திரக் கடலோரம் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக ஆந்திராவின் கடலோரமாவட்டங்கள் மற்றும் உள்புறப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
பலத்த மழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் பலத்த மழை மற்றும் வெள்ளத்துக்குஇதுவரை 130 பேர் பலியாகியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான கால்நடைகளும் இறந்துள்ளன. லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் வீடுகள்இடிந்துள்ளன. இவை தவிர வேறு சொத்துக்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆந்திர முதல்வர் எம். சந்திரபாபு நாயுடு விமானம் மூலம் வெள்ளிக்கிழமை சுற்றிப் பார்த்தார்.
மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆந்திர அரசு அளித்து வரும் நிவாரணப் பணிகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்புத்தரவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இது தவிர, அனைத்துக் கட்சிக் கூட்டமும் கூட்டப்பட்டு, அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளை அவர் விளக்கினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்குத் தான் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால், சொத்து சேத மதிப்புஇன்னும் கணக்கிடப்படவில்லை. விரைவில் சொத்து சேத மதிப்பு கணக்கிடப்பட்டு விரைவில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்அவர்.
யு.என்.ஐ.