கென்யா செல்லும் இந்திய அணி
சென்னை:
கென்யாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள இரண்டாவது ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு 23 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த 23 பேரில் அசாருதீன், ஜடேஜா, மோங்கியா, நிகில் சோப்ரா ஆகியோர் இடம் பெறவில்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 5பேர் கொண்ட தேர்வு கமிட்டி இந்த அணியைத் தேர்வு செய்துள்ளது.
கென்யா தலைநகர் நைரோபியில் அக்டோபர் 3-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில்இந்தியா உள்பட 9 நாடுகள் கலந்து கொள்கின்றன.
இப் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு கமிட்டி சென்னையில் சனிக்கிழமைகூடியது. 3 மணி நேர ஆலோசனைக்குப் பிறகு 23 பேர் கொண்ட அணியை அக் கமிட்டி அறிவித்தது.
இதில் அசாருதீன், மோங்கியா, ஜடேஜா, நிகில் சோப்ரா ஆகியோர் இடம் பெறவில்லை. பல புது முகங்கள் இடம் பெற்றுள்ளனர்.
புதிய அணி பற்றி கிரிக்கெட் வாரியச் செயலர் லேலே, தேர்வு கமிட்டித் தலைவர் சந்து போர்டே ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஐ.சி.சி. நாக்-அவுட் போட்டிக்கான இந்திய அணிக்கு 23 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு செப்டம்பர் 13 முதல் 23 வரை பயிற்சிஅளிக்கப்படும்.
யுவராஜ் சிங், மொகம்மது கெய்ஃப், அஜய் ராத்ரா, ரூபன்பால், விஜய் தாஹியா, ஜாஹீர் கான் ஆகிய புது முகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பயிற்சி முகாமைஎங்கு நடத்துவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. சென்னையிலேயே கூட இம் முகாம் நடத்தப்படலாம்.
பயிற்சி முகாமுக்குப் பிறகு இறுதியாக 14 பேர் கொண்ட இந்திய அணி செப்டம்பர் 19 அல்லது 20-ம் தேதி அறிவிக்கப்படும். அப்போது இந்தியஅணிக்கான புதிய பயிற்சியாளர் யார் என்றும் அறிவிக்கப்படும்.
இந்திய அணிக்கான புதிய பயிற்சியாளர் யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. அதை வாரியத் தலைவர்தான் முடிவு செய்யவேண்டும். அவருக்குத்தான் அந்தஅதிகாரம் உள்ளது.
மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள அசாருதீன், ஜடேஜா, நிகில் சோப்ரா, மோங்கியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியஅணியில் இருந்து அவர்கள் நீக்கப்படவில்லை.
மேற்கண்ட நபர்கள் மீது விசாரணை நடைபெற்று வரும் விலையில் கென்யா போட்டிக்கு அவர்கள் தேர்வு செய்யப்பட்டால் அவர்களுக்கு மேலும்நிர்பந்தம் ஏற்படும். ஆட்டத்தில் அவர்கள் கவனம் செலுத்தமுடியாது.
எந்தவிதமான பிரச்சினையோ, நிர்ப்பந்தமோ இல்லாத இந்திய அணியைத் தேர்வு செய்ய முடிவு செய்துதான் மேற்கண்ட 4 பேரையும் தேர்வு செய்யவில்லை.மற்றபடி வேறு காரணம் ஏதும் இல்லை.
எதிர்காலத்தில் இந்திய அணிக்கு அவர்கள் மீண்டும் பரிசீலிக்கப்படுவார்கள். 2003-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட்போட்டியைக் கருத்தில் கொண்டு இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புவதால், ஒருநாள் போட்டிகளுக்கு என்னை தேர்வு செய்யவேண்டாம் என்று வேகப் பந்து வீச்சாளர் ஜவகல்ஸ்ரீநாத் கேட்டுக் கொண்டதால் கென்யா போட்டிக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை.
வீரேந்தர் ஷேவாக், சந்தோஷ் சக்ஸேனா, முரளி கார்த்திக் ஆகியோரது பெயரும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் பரிசீலிக்கப்படும் அனைவரையும் தேர்வுசெய்யப்படமுடியாது. ஆகவே, பரிசீலிக்கப்பட்ட நபர்களில் சிறந்த 23 பேரைத் தேர்வு செய்துள்ளோம் என்றனர் அவர்கள்.
பயிற்சி முகாமுக்குத் தேர்வு செய்யப்பட்ட 23 பேர் விவரம்:
சவுரவ் கங்குலி (கேப்டன்)
ராகுல் திராவிட் (துணை கேப்டன்)
சச்சின் டெண்டுல்கர்
ஹேமங் பதானி
வினோத் காம்ப்ளி
சடகோபன் ரமேஷ்.
ராபின் சிங்
அனில் கும்ப்ளே
சுனில் ஜோஷி
வெங்கடேஷ் பிரசாத்
டி. குமரன்
தெபஷிஷ் மொகந்தி
எஸ். ஸ்ரீராம்
யுவராஜ் சிங்
அஜய் ராத்ரா (விக்கெட் கீப்பர்)
அஜித் அகர்கர்
ஜாஹீர் கான்
அமித் பண்டாரி
ரதீந்தர் சிங் சோதி
விஜய் தாஹியா (விக்கெட் கீப்பர்)
ரூபன் பால் (விக்கெட் கீப்பர்)
மொகம்மது கெய்ஃப்
ஜேகப் மார்ட்டின்
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications