ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு ... பதக்கம் கிடைக்குமா?
டெல்லி:
சிட்னியில் இம் மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் நிஷா மில்லெட் மட்டுமே கலந்து கொள்கிறார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் இம் மாதம் 15-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் 116 பேர் கொண்ட இந்திய அணி கலந்துகொள்கிறது.
நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் ஒரே ஒருவர்தான் கலந்து கொள்கிறார். அவர் பெங்களூரைச் சேர்ந்த நிஷா மில்லெட். இவர் 200 மீட்டர் பிரீஸ்டைல்பிரிவில் கலந்து கொள்கிறார்.
இப்போது என்னுடைய விருப்பம் எல்லாம் 200 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவேண்டும் என்பதுதான். அதுவே மிகவும்கடினமானது என்கிறார் நிஷா மில்லெட்.
சிட்னி ஒலிம்பிக்குக்குப் பயிற்சி பெறும் நோக்கில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் அவர் பயிற்சி பெற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே சிறந்த நீச்சல் பயிற்சியாளர்களில் ஒருவரான ஆஸ்திரேலியாவின் பெர்னீ முல்ராய், நிஷா மில்லெட்டுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.
ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற 200 மீட்டர் (பிரீஸ்டைல் பிரிவு) தூரத்தை 2 நிமிடம் 07.07 விநாடிகளில் கடக்கவேண்டும். ஆனால், நான் 2 நிமிடம்06.62 விநாடிகளில் தூரத்தைக் கடந்து தகுதி பெற்றுள்ளேன்.
ஆஸ்திரேலியாவில் பெற்ற பயிற்சியின்போது எனது நேரத்தை 2 நிமிடம் 06.00 விநாடிகளாகக் குறைத்துள்ளேன். ஒலிம்பிக்கில் நிச்சயம் நான் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறுவேன் என்று நம்புகிறேன் என்றார் நிஷா மில்லெட்.
ஒலிம்பிக்கில் நிஷா மில்லெட் நிச்சயம் 2 நிமிடம் 05.00 விநாடிகளில் 200 மீட்டர் தூரத்தை நீந்திக் கடப்பார் என்று நம்புவதாக தேசிய நீச்சல் பயிற்சியாளர்கேவி. சர்மா தெரிவித்தார்.
சிட்னி ஒலிம்பிக்கில் 200 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் 50 பேர் போட்டியிடுகின்றனர். அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற முதல் 16 பேரில் ஒருவராகவரவேண்டும்.
இப்போதுள்ள நேரத்தை விட 2 அல்லது 3 விநாடிகள் குறைவாக 200 மீட்டர் தூரத்தை நிஷா மில்லெட் கடந்துவிட்டால் போதும் அரையிறுதி மட்டுமல்லஇறுதிச் சுற்றுக்கே தகுதி பெறலாம் என்றார் சர்மா.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications