படகுக்கு அடியில் சிக்கிய தமிழர்கள்! வியட்நாமில் நடந்தது என்ன? உயிர் தப்பியவர் பேட்டி
ஹனோய்: வியட்நாமில் நடந்த படகு விபத்தில் 10 தமிழர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த விபத்தில் உயிர் தப்பிய தமிழர் நடந்த சம்பவம் குறித்து விவரித்திருக்கிறார்.
வியட்நாமில் தீவு சுற்றுலாவுக்கு இந்தியர்கள் 32 பேர் சென்றிருந்தனர். இதில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை என தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 20 பேர் இருந்தனர். இந்நிலையில் இன்று மதியம் அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

விபத்தில் தப்பிய தமிழர் பிரேம்குமார் கூறியதாவது, "இன்று காலை நாங்கள் ஒரு தீவுக்கு போயிருந்தோம். அங்கிருந்து மதிய உணவுக்காக இன்னொரு தீவுக்கு சென்றோம். அப்படி போகும்போது படகு, அலையில் அடித்து கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்திருக்கின்றனர். விபத்து நடந்தவுடன் மீட்பு பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால், இதற்குள் உயிரிழப்பு ஏற்பட்டுவிட்டது. உயிரிழந்தவர்களில் என்னுடன் பயணித்த முருகபிரபு என்கிற என்னுடைய நண்பரும் ஒருவர்.
உயிரிழந்த 15 பேரில்.. 10 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். 2 பேர் கேரளத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். நாங்கள் கேட்பதெல்லாம் ஒரு விஷயம்தான். உயிரிழந்தவர்களின் உடலை முடிந்தவரை சீக்கிரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான். படகில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், லைப் ஜாக்கெட் உள்ளிட்டவை இருந்தன. இருந்தும் அலையில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது" என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.
இந்த விபத்து குறித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.
விபத்துக்கு காரணம் திடீரென உருவான ராட்சத அலைதான் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இருப்பினும் விபத்து குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications