தேனியில் ஒரு கிராம் தங்கம் கூட இல்லை.. 14 கோடி ரூபாய் அவுட்! எஸ்பி ஆபீஸ் வளையத்தில் முக்கிய புள்ளி
தேனி: தேனி வங்கிகளில் ஒரு கிராம் தங்கம் கூட இல்லாமல், சாமர்த்தியமாக பணத்தை அள்ளியிருககிறார்கள் சில அதிகாரிகள்.. மொத்தம் ரூ.14 கோடி வரை நகைக்கடன் பெற்றுள்ளனர்.. இந்த விஷயத்தை கேட்டு, உயர் அதிகாரிகளுக்கே தலைசுற்றி விட்டது.. இதுகுறித்து வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்... என்னதான் நடந்தது தேனியில்?
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக் கிளையில் வழக்கமான தணிக்கை மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக வங்கியின் உயர் அதிகாரிகள் குழுவினர் நேரில் வந்திருந்தனர்.

தேனி அரசுடைமையாக்கப்பட்ட வங்கி
அப்போது வங்கியின் வரவு-செலவு கணக்குகள் மற்றும் நகைக் கடன் வழங்கப்பட்ட விவரங்களை சரி பார்க்க வேண்டும் என்றும் சொல்லி உள்ளனர்.. இதைக் கேட்டதுமே அங்கிருந்த அதிகாரிகளுக்கு தூக்கிவாரிப் போட்டது... அதிகாரிகளோ, உடனடி சோதனைகளில் ஈடுபட்டனர்.. அப்போதுதான், வங்கியில் வைக்கப்பட்டிருந்த பல நகைக்கடன் கணக்குகளுக்கு எந்தவொரு தங்க நகையும் இல்லை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து விசாரித்தபோது, வங்கியில் பணியாற்றிய சில அதிகாரிகள், வெளிநபர்கள் சிலருடன் சேர்ந்து, இப்படியொரு நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளதும் அம்பலமானது..
நகைக்கடன் அடமானம்
தங்கம் எதுவுமே அடகு வைக்கப்படாத சூழலில், போலியான வாடிக்கையாளர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளைப் பயன்படுத்தி, தங்கம் வைக்கப்பட்டதாக இவர்கள் கணக்கு காட்டி உள்ளனர்.. இதன்மூலம் பல கோடி ரூபாயையும் சுருட்டியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது..
ஓடைப்பட்டி கிளையில் மட்டும் இந்த முறைகேடு நடக்கவில்லை. இதே பாணியில் தேனி அருகே உள்ள கூழையனூர் வங்கியின் கிளையிலும் தணிக்கை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அங்கும் இதேபோன்ற போலி நகைக் கடன் மோசடிகள் அரங்கேறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
14 கோடி ரூபாய் சுருட்டிய அதிகாரிகள்
இந்த 2 வங்கிக் கிளைகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக சுமார் 14 கோடி ரூபாய் வரை முறைகேடாக பணம் அள்ளப்பட்டுள்ளது வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
பொதுமக்கள் தங்களது அவசரத் தேவைக்காக, நகையை அடகுவைத்து சிறு தொகையை கடனாகப் பெறுவதற்காக இந்த வங்கிகளுக்கு சென்று வருகிறார்கள். அப்படியிருக்கும்போது, இம்மக்களின் சூழலை தவறாக பயன்படுத்தி, வங்கியின் பணத்தையே இந்த அதிகாரிகள் மோசடி செய்திருப்பது தெரியவந்தள்ளது.. இதையடுத்து, வங்கியின் உயர் அதிகாரிகள் தரப்பில் தேனி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அரசு வங்கியில் அடாவடி
இந்த புகாரையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் (DCB) இந்த மோசடி வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.. 2 வங்கிக் கிளைகளிலும் உள்ள ஆவணங்கள், கம்ப்யூட்டர் பதிவுகள், கடன் பெற்றதாகக் கூறப்படும் நபர்களின் விவரங்கள் என மொத்தத்தையும் போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நடந்துள்ள இந்த ரூ.14 கோடி மோசடி தொடர்பான புகார் மீது இப்போது முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளோம். வங்கிக் கணக்குகள் மற்றும் மோசடிக்குத் துணையாக இருந்த அதிகாரிகள் யார் யார் என்பது குறித்துத் ஆராயப்பட்டு வருகிறது.
சம்மன் அனுப்பப்படுமா?
சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பி, நேரில் வரவழைத்து விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணையின் முடிவில், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று உறுதியளித்துள்ளனர்.
தேனியில் அரசு வங்கியிலேயே ஒரு கிராம் தங்கம் கூட இல்லாமல், கோடி கோடியாக மோசடி நடந்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!!












Click it and Unblock the Notifications