கருணாநிதியை வரவேற்க பெங்களூரில் பந்த்
பெங்களூர்:
வீரப்பன் விவகாரம் குறித்து விவாதிக்க வெள்ளிக்கிழமை பெங்களூர் வருகிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.அவரை எதிர்த்து பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக முதல்வர்கிருஷ்ணா தான் இதற்கு முன் 3 முறை சென்னை சென்றார்.
கர்நாடக முதல்வர் தான் சென்னை செல்ல வேண்டுமா?, இந்த விவகாரம் குறித்துப் பேச கருணாநிதி கர்நாடகம் வரமாட்டாரா என சில கன்னட அமைப்புகள் கேள்வி கேட்டன.
இந் நிலையில் 3வது முறையாக காட்டுக்குள் சென்ற நக்கீரன் ஆசிரியர் கோபால் வெறும் கையுடன் திரும்பினார்.அவரால் ராஜ்குமாரையும் மேலும் 3 பேரையும் மீட்டு வர முடியவில்லை.
இதையடுத்து பிடிவாதமாக இருக்கும் வீரப்பன் குறித்து பேச கருணாநிதியே இந்த முறை பெங்களூர் வருகிறார்.வெள்ளிக்கிழமை அவர் பெங்களூர் வருவார். கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை சந்தித்துப் பேசுவார். பின்னர்,ராஜ்குமார் குடும்பத்தினரையும் சந்திப்பார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி கருணாநிதிபெங்களூர் வரும் நாளன்று அவரை எதிர்த்து பந்த் நடத்த 3 கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
ஜக்கரே வெங்கட்ராமையா என்பவர் நடத்தி வரும் கன்னட ஹிதரக்ஷன சமிதி, கன்னட வளர்ச்சி வாரியத்தின்தலைவர் சம்பா, கன்னட இயக்கவாதி நாராயண கெளடா ஆகியோர் இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்துள்ளனர். இவர்கள மூவரும் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர். இதன் பின்னர் இந்த முடிவை எடுத்தனர்.
இந்த வேலை நிறுத்தம் கர்நாடக அரசுக்கு எதிரானது அல்ல என்றும், இது தமிழக அரசுக்கு எதிரானது எனவும்அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வெள்ளிக்கிழமை டி.வி. சானல்களில் சினிமா, நாடகம், பாடல்கள் உள்படபொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது எனவும் செய்திகளை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் எனவும்கூறியுள்ளனர்.