நடு வீதியில் கிடந்த வெடி குண்டுகள்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தெருவில் கிடந்த வெடிகுண்டை சுத்தியலால் அடித்ததால் அது வெடித்து அரபிக் கல்லூரி மாணவர்கள் இருவர் படுகாயம்அடைந்தனர்.
உடன்குடியில் உள்ள அல் மதரஸத்துல் கமதியா அரபி கல்லூரி உள்ளது. இங்கு விடுதியில் தங்கி மாணவர்கள் படித்து வருகின்றனர்.
புதன்கிழமை மாலை நான்கு மணியளவில் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அப்துல் கரீம் (12),காதீர் (14) இருவரும் கல்லூரியின் வெளியேவந்தனர். அங்கே ரோட்டில் பந்து போன்ற வடிவத்தில் மூன்று பொருட்கள் இருந்ததைப் பார்த்தனர்.
அதில் ஒன்றை எடுத்துக்கொண்டு கல்லூரி வளாகத்தினுள் சென்றனர். உள்ளே சென்றதும் அதில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்காக சுத்தியலால்அதை தட்டியிருக்கின்றனர். பயங்கர சப்தத்துடன் அந்தப் பொருள் வெடித்துச் சிதறியது.
இதில் அப்துல் கரீம், காதீர் இருவருமே படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
இவர்களில் அப்துல் கரீம் நெல்லை பேட்டையைச்சேர்ந்தவர். காதீர் ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியைச் சேர்ந்தவர். வெடிகுண்டு வெடித்த சப்தம்கேட்டதும் உடன்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரியின் முன் பெரும் கூட்டம் கூடிவிட்டது.
காவல் துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். மீதமிருந்த இரு குண்டுகளையும் வெடிக்காமல் செயலிழக்கச் செய்தனர். நடுரோட்டில், அதுவும்பட்டப்பகலில் எப்படி வெடிகுண்டு கிடந்தது? வேண்டுமென்றே கல்லூரியின் முன்பு போட்டுவிட்டுச் சென்றுள்ளார்களா? அல்லது வேறு எங்காவது கொண்டுசெல்லும் பொழுது தவறி விழுந்து விட்டதா என்பது பற்றி போலீஸார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.