இன்னும் முழுச் சுதந்திரம் கிடைக்கவில்லை .. ராமதாஸ்
பொன்னகரம்:
நாட்டு மக்களுக்கு இன்னும் முழுச்சுதந்திரம் கிடைக்கவில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் 150 வது தொகுதி மாநாடு பொன்னகரத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசியதாவது:
தற்போது நாட்டில் பசி, பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்ற பிரச்சனைகள் தலைவிரித்தாடுகிறது. இதுவரை எட்டு ஐந்தாண்டுத்திட்டங்கள் போட்டு, கோடிக்கணக்கில் பணம் செலவழித்ததுதான் மிச்சம்.
நாட்டு மக்களின் தேவை இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. இந்திய பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தாராளமயமாக்கல்,உலகமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டது.
வெளிநாட்டிலிருந்து விவசாயப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால் இந்திய விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் மத்திய, மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.அதன்பின் தேவைப்பட்டால் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார் ராமதாஸ்.