தில்லு முல்லு செய்கிறது மத்திய அரசு ... ஜெ. சாடல்
சென்னை:
ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள மத்திய அரசு தில்லுமுல்லுகளைச் செய்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் புதன் கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
மத்தியில் ஆளும் பாஜக தனது ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள எல்லாவித தில்லுமுல்லுகளையும் நிகழ்த்தி வருகிறது. தேசிய அளவில் நிறைவேறும் சிலநிகழ்ச்சிகள் அதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
மேற்கு வங்க மக்களின் நல்லன்பை பெற்று நீண்ட நெடுங்காலமாக ஆட்சி நடத்தி வரும் பெரியவர் ஜோதிபாசுவின் ஆட்சியைக் கலைக்க பாஜக அரசு காயைநகர்த்தி வருகிறது.
மம்தா பானர்ஜியை திருப்திப்படுத்தவும், திரிணமூல் காங்கிரஸ் ஆதரவைத் தொடர்ந்து பெறவும் பாஜக ஆட்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.
மேற்கு வங்கத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசை உள்நோக்கத்தோடு அனுப்பி வைத்தனர். அவரும் டெல்லியில் தீட்டப்பட்டவஞ்சகச் சதியை நிறைவேற்றும் வகையில் ஒன்றரை நாள் மேற்கு வங்கத்தை சுற்றிப் பார்த்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியிடம் பெர்னாண்டஸ் அளந்த கதையை வைத்து மேற்கு வங்க அரசைக் கலைத்து விடுவதாக பூச்சாண்டி காட்டுகின்றனர்.
முறைகேடாக மேற்கு வங்க ஆட்சியை கலைத்து மம்தாவை முதல்வராக்க, மத்திய அரசு ஜனநாயக நெறிமுறைகளைக் குழி தோண்டி புதைக்கும் முயற்சிக்குஎன் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார் ஜெயலலிதா.