"சேலம் உருக்காலையை விற்கப் பார்க்கிறார் கருணாநிதி
செசென்னை:
சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்று கருணாநிதி குடும்பம் லாபம் அடையத் துடிக்கிறது. அதை தடுத்து நிறுத்துவோம் என்று அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் வியாழக் கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
சேலம் உருக்காலையைத் தனியாருக்கு விற்கும் தி.மு.க - பா,ஜ,க அரசுகளின் மோசடியைத் தடுக்க அ.தி.மு.க .தலைமையில் எதிர்க் கட்சிகள்அனைத்தும் திரண்டதைப் பார்த்த கருணாநிதி அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.
மக்கள் பிரச்னையில் ஒன்று திரண்டு போராட எதிர்க்கட்சிகள் அ.தி.மு.க தலைமையில் தயாராகி விட்டதை கருணாநிதியால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. அதனால் தனக்கு வேண்டிய சிலரைத் தூண்டி விட்டு உண்மைக்கு மாறான கேள்விகளை கேட்கச் செய்து பிரச்னையை திசை திருப்பமுயன்றுள்ளார்.
கருணாநிதியின் தூண்டுதல் பேரில் உண்மை விவரங்களை அறியாமல், அ.தி.மு.க.அவைத் தலைவர் காளிமுத்து தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்முடிவில் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்பிக் பங்குகளைத் தனியாருக்கு விற்றதாக உண்மைக்கு மாறான கேள்வி உள்நோக்கத்தோடு கேட்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு "ஜீரோ பாண்ட்ஸ்என்று பெயர். அந்த புதிய பங்குகளை வாங்க தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனத்துக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஏற்கனவே அரசு செய்த முதலீட்டுக்குப்போதிய லாபம் இல்லாத நிலையில், ஸ்பிக் நிறுவனம் அறிவித்த புதிய பங்குகளை வாங்க அரசு விரும்பவில்லை.
இன்னும் சொல்லப் போனால், சேலம் உருக்காலை முழுவதும் அரசுக்குச் சொந்தமானது. ஸ்பிக் நிறுவனம் முழுமையான அரசு நிறுவனம் அல்ல. அதுஒரு கூட்டு நிறுவனம். தமிழ்நாடு அரசின் டிட்கோவுக்கு அதில் 26 சதவீதப் பங்குகளே உள்ளன.
ஸ்பிக் நிறுவனம் தொடங்கப்பட்ட காலம் முதலே இந்நிலை தான் நீடித்து வருகிறது. பங்குகள் குறைவாக இருந்தாலும் அரசு ஸ்பிக் நிறுவனத்தை நடத்திச்செல்வதில் தனி அதிகாரமிக்க வீட்டோ பவர் இன்றும் இருந்து வருகிறது. அரசு ஏற்கனவே செய்துள்ள முதலீட்டுக்குப் போதிய வருவாய்கிடைக்கவில்லை என்ற நிலையில் மேலும் முதலீட்டை 32 கோடி அளவுக்கு அதிகரிக்கத் தேவையில்லை என்றே அரசு தீர்மானித்தது.
சமயநல்லூர் அனல் மின் நிலையத்தை அப்படியே எடுத்துப் போட்டு விழுங்கி ஏப்பம் விட்ட கருணாநிதிக்கு இந்த உண்மை தெரியும் என்றாலும், சேலம்உருக்காலையைத் தனியாருக்கு விற்று லாபம் அடையத் துடிக்கும் தனது குடும்பத்தின், குறிப்பாக முரசொலி மாறனின் ஆவலுக்கு எதிராக, அனைத்துக்கட்சிகளும் திரண்டதைப் பார்த்து கருணாநிதி கதி கலங்கி நிலை குலைந்து போயுள்ளார்.
எனவே தான் தேவையற்ற கேள்விகளை எழுப்பி பிரச்னையை திசை திருப்ப முயல்கிறார். கருணாநிதி என்ன செய்தாலும் சேலம் உருக்காலையைத்தனியாருக்கு விற்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவோம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.