மில்லனியத்தின் முதல் ஒலிம்பிக் சிட்னியில் நாளை தொடக்கம்
சிட்னி:
புதிய மில்லேனியத்தின் முதல் ஒலிம்பிக் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
சிட்னி நகரின் மையப் பகுதியில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் தொடங்க விழா நடைபெற உள்ளது. நிறைவு விழாவும் இங்கேயே நடத்தப்படவுள்ளது.வெள்ளிக்கிழமை தொடங்கும் ஒலிம்பிக் விளையாட்டு அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஒலிம்பிக் மைதானத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் உட்கார்ந்து நிகழ்ச்சிகளைக் காணமுடியும். ஒலிம்பிக் வரலாற்றிலேயே இதுவரை தொடக்க விழாநிகழ்ச்சிகளோ அல்லது விளையாட்டுப் போட்டிகளோ நடத்தப்பட ஸ்டேடியங்களில் இதுவே பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னியில் இப்போது நடைபெற இருப்பது 27-வது ஒலிம்பிக் போட்டியாகும். முந்தைய போட்டிகளைக் காட்டிலும் சாதனை அளவாக சிட்னிஒலிம்பிக்கில் 200-க்கும் அதிகமான நாடுகள் கலந்து கொள்கின்றன.
அந்த நாடுகளைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் 30 வகையான போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர்.
சுமார் 13 இடங்களில் இப் போட்டிகள் நடைபெற உள்ளன. சிட்னி தவிர ஆஸ்திரேலியாவின் பிற முக்கிய நகரங்களான கான்பெரா, அடிலெய்டு,மெல்பெர்ன், பிரிஸ்பேன் ஆகிய நகரங்களிலும் சில விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
கடைசியாக 1996-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 197 நாடுகளின் சார்பில் 10 ஆயிரத்துத்துக்கும்அதிகமான வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
அந்த ஒலிம்பிக்கில் அதிக தங்கம் மட்டுமல்ல மொத்தமாக அதிகப் பதக்கங்களை வென்று அமெரிக்கா முதலிடம் பெற்றது.
இப்போது நடைபெற உள்ள சிட்னி ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்குப் பலத்த போட்டியாக ரஷ்யா விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர, போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியாவும் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் போட்டியிடும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்னி ஒலிம்பிக்கில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கு கொள்கிறது. சுமார் 13 போட்டிகளில் இந்தியா கலந்து கொள்கிறது. இதுவரைஒலிம்பிக்கில் குறிப்பிடத்தக்க அளவுக்கு இந்தியா பதக்கம் ஏதும் பெறவில்லை.
ஹாக்கியில் மட்டும் 8 தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. அதைத் தவிர 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை இந்தியாவென்றுள்ளது.
அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரே ஒரு பதக்கம்தான் கிடைத்தது. டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் லியாண்டர் பயஸ்வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த முறை ஹாக்கியில் மீண்டும் தங்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அணியின் கேப்டனும், பயிற்சியாளரும் கூறியுள்ளனர். அது தவிர,இரட்டையர் டென்னிஸிலும் இந்தியாவுக்குப் பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தது 2 பதக்கமாவது இந்தியாவுக்குக்கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தொடக்க நாள் நிகழ்ச்சி அணிவகுப்பில் இந்திய அணியில் 77 பேர் கலந்து கொள்கின்றனர். இந்திய அணி கேப்டன் லியாண்டர் பயஸ், தேசியக் கொடியை ஏந்திச்செல்கிறார்.