நரபலி சம்பவத்தால் கலங்கும் மதுரை
மதுரை:
நரபலி சம்பவத்தால் நாளுக்குநாள் கலங்கிக் கொண்டிருக்கிறது மதுரை. ஆசிரமம் முழுக்க பெண்கள் பிணம் குவிந்து கிடக்கிறது என்றும், சின்னக்குழந்தைகளைக்கூட சாமியார் கொன்றிருக்கலாம் என்றும் வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது.
மகனைக்காணோம், மகளைக் காணோம் என்று மதுரை போலீஸாருக்கு காணாமல் போனவர்கள் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.
மதுரை மாவட்டத்தில் உள்ள சில உயர் அதிகாரிகளுக்கும், மாவட்டத்தில் உள்ள சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருக்கும் என்று மாநிலகுற்றப்பிரிவு போலீஸார் சந்தேகப்படுகின்றனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
பிழைப்புத்தேடி மதுரைக்கு வந்த ஆசிரம சாமியார் நளினசேகர் இன்று கார், பங்களா என்று எப்படி வளர்ந்தார்? இதன் பின்னணி என்பது குறித்து போலீஸார்விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து சரணடைந்த நளினசேகர் கொடுத்துள்ள வாக்குமூலங்களை ரகசியமாக வைத்துள்ளனர். மாநில குற்றப்பிரிவு போலீஸார் ஆசிரமப் பகுதிகளைத்தோண்டிப் பார்க்க முடிவு செய்துள்ளனர்.
நரபலி என்ற பெயரில் கொலை செய்யப்பட்டு ஆசிரமத்திலேயே சிலர் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று யோசித்து வருகிறார்கள். நாளை ஆசிரமம்தோண்டப்பட்ட பிறகு என்னென்ன பூகம்பங்கள் கிளம்பப்போகிறதோ என்று கவலையில் உள்ளனர் மதுரைவாசிகள்.