கர்நாடகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு தரும்படி, கர்நாடக தமிழர் சங்கம்செவ்வாய்க்கிழமை கவர்னர் ரமாதேவியைச் சந்தித்து மனு கொடுத்தது.
இதுகுறித்து கர்நாடக தமிழர் சங்கத் தலைவர் ஆர்.எஸ்.மாறன் கூறியதாவது:
ஜூலை 30 ம் தேதி கன்னட நடிகர் ராஜ்குமார், சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார். இதையடுத்து பெங்களூர் உள்பட கர்நாடகத்தில் பலமாவட்டங்களில் வாழும் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம் மற்றும் கர்நாடக, தமிழக எல்லைப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று எப்போதும் மக்கள் பதட்டத்துடன் காணப்படுகின்றனர். கலவரத்தில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைதுசெய்து, தமிழர்களுக்கு போதிய பாதுகாப்பை அளிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும்.
தேவைப்பட்டால் பிற மாநிலங்களிலிருந்து போலீஸாரை வரவழைத்து, கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
வீரப்பன், ராஜ்குமாரை கடத்தியதற்காக கர்நாடகத்தில் வாழும் தமிழ் மக்களைத் துன்புறுத்துவதில் எந்த பயனும் இல்லை.
இந்தக் கடத்தல் சம்பவத்தைக் கண்டித்து, பல்வேறு தமிழர் அமைப்புக்கள் கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் பேரணிகளும், ஊர்வலங்களும் நடத்தியுள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது.
இக்கடத்தல் சம்பவத்தால் கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் தாக்கப்படுவது மிகவும் வேதனையான விஷயம். இதில் கவர்னர் ரமாதேவி தலையிட்டு,கர்நாடகத்தில் வாழும் மொழிச் சிறுபான்மையினரான தமிழர்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு தர உத்தரவிட வேண்டும் என்றார் மாறன்.
யு.என். ஐ.












Click it and Unblock the Notifications