பாண்டிச்சேரி அரசுக்கு ஆபத்து நீங்கியது
சென்னை:
பாண்டிச்சேரி தமாகாவில் இருந்து பிரிந்து சென்ற மூன்று எம்.எல்.ஏக்களும் அம்மாநில காங்கிரஸ் ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவுஅளிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் சண்முகம் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு ஏற்பட்ட ஆபத்துதற்காலிகமாக நீங்கியுள்ளது.
அதேநேரத்தில் மூப்பனாரை இனிமேல் தலைவராக ஏற்க மாட்டோம் என்று இந்த அணியினர் அறிவித்துள்ளனர்.
பாண்டிச்சேரி தமாகாவை உடைத்துக் கொண்டு மனோகர், ராஜசேகர உடையார், ஏழுமலை ஆகிய மூன்று சட்டமன்றஉறுப்பினர்கள் வெளியேறி தனி அணியாக செயல்படத் துவங்கியுள்ளனர்.
வியாழக்கிழமை முதல்வர் சண்முகத்தை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்த இந்த மூவரும் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கேள்வி: உங்களது அணிக்கு அமைச்சர் பதவி கேட்பீர்களா?
பதில்: அது பின்னால் தான் தெரியும்.
கேள்வி: தமாகா நிர்வாகிகள் தன்னுடன் இருப்பதாக கண்ணன் சொல்கிறார். தமாகா நிர்வாகிகள் யாருடன் இருக்கிறார்கள்?
பதில்: 11 நிர்வாகிகள் எங்களுடன் பிரிந்து வந்து விட்டனர். மற்றவர்கள் கண்ணனுடன் உள்ளனர்.
கேள்வி: பிரிந்த குழுவுக்கு நீங்கள் யார் தலைவர்? கண்ணன் தலைவரா இல்லையா?
பதில்: எங்களுக்கு நாங்கள் தான் தலைவர்.
கேள்வி: உங்களுக்கு மூப்பனார் தலைவரா இல்லையா?
பதில்: மூப்பனார் எங்களுக்கு இனிமேல் தலைவர் இல்லை.
கேள்வி: வைசியால் வீதியில் உள்ள கட்சி அலுவலகம் யாருக்கு சொந்தம்?
பதில்: அது வாடகை கட்டடம். வாடகை தருவோருக்கு அது சொந்தம்.
கேள்வி: மூப்பனாரிடம் இருந்து உங்களுக்கு ஏதேனும் தகவல் வந்ததா?
பதில்: அவரிடம் இருந்து ஏன் தகவல் வர வேண்டும்.
கேள்வி: தமாகா அமைச்சர்கள் மீது கண்ணன் கூறிய குற்றச்சாட்டுகளில் உடன்பாடு உண்டா?
பதில்: ஏற்கனவே இருந்த குற்றச்சாட்டுக்களை அவர் எடுத்துக் கூறியுள்ளார்.
கேள்வி: புதுவை அரசுக்கு ஸ்திரத்தன்மை இல்லை என்று திமுக கூறியுள்ளதே?
பதில்: அவர்கள் எதிர்க் கட்சியினர். அப்படித்தான் கூறுவார்கள்.
கேள்வி: காங்கிரசில் மீண்டும் இணைவீர்களா?
பதில்: நாங்கள் தனி அணியாக செயல்படுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.