வயதானால் அரசியலில் ஈடுபடக் கூடாதா? ஜெவுக்கு கருணாநிதி கேள்வி
சென்னை:
அதிமுக தலைமையின் தரக்குறைவான விமர்சனத்திற்கு பதில் சொல்ல காலம் காத்துக் கொண்டிருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதம் வருமாறு:
திமுக ஆட்சியிலும் பின்னர் அதிமுக ஆட்சியிலும் அமைச்சர்களாக இருந்த ஆறேழு நண்பர்கள் இணைந்து "புரட்சித் தலைவர் அதிமுக என்றுபுதுக்கட்சியொன்றைத் தொட்ஙகியிருக்கின்றனர். எம்.ஜி.ஆர். விசுவாசிகள் அனைவரையும் ஒன்று திரட்டுவதுதான் புதிய கட்சியின் நோக்கம் என்பதைத்தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
குழந்தை பிறந்து இன்னும் தொப்புள் கொடி கூட அகற்றவில்லை என்ற நிலையில் அதன் மீது கடுமையான கண்டனத்தில் அதிமுக தலைமை இறங்கி விட்டது.
விசுவாசமற்றவர்கள்; நம்பிக்கையற்றவர்கள்; சித்துவேலைக்காரர்கள்; எம்ஜிஆரின் ஆன்மா இவர்களை மன்னிக்காது; துரோகத்தின் சின்னங்கள்என்று இத்தனை வார்த்தை அலங்கார அர்ச்சனைகளுடன்,
வயதான காலத்தில் எங்காவது பொழுதுபோக்கு சங்கத்தில் சேர்ந்து ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்க வேண்டியவர்களுக்கு திடீரென்று ஒலிம்பிக்ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் ஆசை வரலாமா? என்ற கேள்வியையும் அதிமுக தலைமை கேட்டுள்ளது.
வயதானவர்கள் அரசியலிலேயே ஈடுபடக் கூடாது என்பதுதான் இலக்கணமெனில், காந்தியடிகள் நவகாளி யாத்திரைக்குப் பதில் காசி ராமேஸ்வரம்என்று தீர்த்த யாத்திரையில் தான் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
தந்தை பெரியார் தனது தள்ளாத வயதிலும் சிறுநீர் தங்கும் வாளியொன்றை இடுப்பின் அருகே பொருத்திக் கொண்டு சாவின் கொடுங்கரத்தில் வீழ்வதற்குச் சிலநாட்களுக்கு முன் வரையில் கூட்டங்களில் பேசிக் கொண்டிருந்தாரே, அவர் இழுத்துப் போர்த்துக் கொண்டு தன் பணியை சுருட்டி வைத்து விட்டுப் படுக்கையில்கிடந்து விடவில்லையே.
காயிதேமில்லத் "வாலிபத்தில் எனக்கு அரசியல் - வயோதிகத்தில் அல்ல என்று கூறித் தன்னை விடுவித்துக் கொள்ளவில்லையே.
இந்திராகாந்தி பிரகடனப்படுத்திய நெருக்கடி நிலையை எதிர்த்து காமராஜர் "தேசம் போச்சு தேசம் போச்சு என்று தேம்பும் குரலில் கூறியது திருத்தணிவட்டாரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடைகளில் தானே. அவரென்ன வயதாகி விட்டது இனி எனக்கு அரசியல் தேவையில்லை என்று அறிவித்துவிட்டவரா?
விழிகளை இறுதியாக மூடும் வரையில் வித்தகர் ராஜாஜி தனது அரசியல் சிந்தனையிலிருந்து விடுபடவில்லையே.
இதையெல்லாம் சுட்டிக் காட்டும் நானும் 77 வயதை எட்டிப்பிடித்தவன் என்பதை யார் மறந்தாலும் நான் மறப்பவனில்லை. இன்னும் இருக்கிற கொஞசகாலம் - எஞ்சியிருப்பது நாட்களோ, மாதங்களோ, ஓரிரு வருடங்களோ, இந்த நாட்டுக்காக, சமுதாயத்திற்காக, தமிழ் மொழிக்காக, பொதுப்பணிக்காகவே இறுதி மூச்சை வழங்க வேண்டும் என்று எண்ணிக் கிடப்பவன் தானே நான். அதனால் தானே இந்த வயதிலும் எல்லாவற்றையும்சகித்துக் கொள்ள முடிகிறது.
எம்.ஜி.ஆர். பெயரை முன் வைத்து தொடங்கப்பட்ட புதிய கட்சியின் மீது பாய்ச்சல் நடத்தியுள்ள அதிமுக தலைமை, எம்ஜிஆர் விசுவாசிகள் என்று கூறிக் கொள்ளஇவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? விசுவாசிகள் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமா? என்றும் கேலி செய்துள்ளது.
அத்துடன் அந்த அறிக்கையில் எம்ஜிஆரின் உண்மை விசுவாசி ஜெயலலிதா அம்மையார் தான் என்றும் கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. நமக்கும்தெரியும், புதிய கட்சி ஆரம்பித்துள்ள நண்பர்களுக்கும் தெரியும்; அந்த அம்மையார் எம்ஜிஆரிடம் காட்டிய விசுவாசம் எத்தகையது என்பது.
நாகரீகம் என்ற ஒன்று இருக்கிற வரையில் அவற்றையெல்லாம் விவரித்துச் சொல்ல என்னாலும் முடியாது, அந்த நண்பர்களாலும் முடியாது.
ஜெயலலிதாவின் விசுவாசம் பற்றி ஆர்.எம்.வீரப்பன் ஒரு பெரிய புத்தகமே எழுதியுள்ளார். அதை விட அவரது விசுவாசத்திற்கு ஆதாரப்பூர்வமான சான்றுஒன்றும் உண்டு.
எம்.ஜி.ஆர். உடல் நலிவுற்று அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய போது, பிரதமர் ராஜிவ் காந்திக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்பத்திரிகைகளில் வெளிவந்ததே. அதை மறக்க முடியுமா? மறுக்கத் தான் முடியுமா?
என்னுடைய செல்வாக்கு வளருவதைக் கண்டு எம்.ஜி.ஆர். பொறமைப்படுகிறார் என்று அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தாரே, அதற்கு பெயர்தான் விசுவாசமா?
இப்போது புதுக்கட்சி ஆரம்பித்துள்ளவர்களிடம் இதுபோன்ற எம்ஜிஆர் விசுவாசத்தைக் காண முடியாது தான். சென்னை சினிமா நகருக்கு எம்.ஜி.ஆர். பெயரைவைக்கச் சொல்லி சினிமா உலகமே ஒருசேரக் கேட்டபோது அதை மறுத்து விட்டு, அதற்கு தன் பெயரையே சூட்டிக் கொண்டவர், எம்ஜிஆர்விசுவாசியாம்.
புதிது புதிதாக ஆரம்பமாகும் கட்சிகளைப் பற்றி விமர்சிப்பது என்பது வேறு; அதைத் தொடங்குபவர்களைப் பற்றி கருத்துக் கூறுவதில் பண்பாடு இருக்கவேண்டுமல்லவா?
இன்று நேற்றல்ல; எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவதும் அறிக்கை விடுவதுமான அநாகரீகப் போக்கு அதிமுக தலைமைக்கு புதிதல்ல. அதைதாங்கிக் கொள்ளும் பக்குவத்தை அதன் தோழமைக் கட்சிகளே வேறுவழியின்றிக் கொஞ்சம் கொஞ்சமாக பழகிக் கொண்டுவிட்ட நிலையில்,எல்லாக் கட்சிகளின் மீதும் விழுந்து பிராண்டிடும் துணிச்சல் ஏற்பட்டிருப்பது வியப்புக்குரியதல்ல.
அதிமுக தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் "போடு தோப்புக்கரணம் என்றால் எண்ணிக் கொள்ளுங்கள் என்று கூறுகிற வீரர்களாகிவிட்டபிறகு எல்லாக் கட்சிகளின் மீதும் இப்படித்தான் தரக்குறைவான தாக்குதலைத் தொடுத்திட அதிமுக நினைக்கும்.
அந்த நினைப்பில்தான் புதிய கட்சியை தொடங்கியுள்ள பழைய நண்பர்கள் மீது இவ்வாறு சேறும் சகதியும் இறைத்துள்ளது. எனினும் இவற்றுக்கெல்லாம்பதில் சொல்லக் காலம் காத்துக் கொண்டுதானிருக்கிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications