போஸ்டர் யுத்தமும் ஆரம்பம்- நாறுகிறது மதுரை
மதுரை:
அழகிரிக்கும் தி.மு.க தலைமைக்கும் ஏற்பட்டுள்ள மோதலால் மதுரை மாநகரமே போஸ்டர் யுத்தத்தில் திணறிக்கொண்டிருக்கிறது. மதுரையில்எந்தப்பக்கம் திரும்பினாலும், அழகிரிக்கு ஆதரவாகவும் எதிராகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
திராவிடக் கழகங்களுக்கே உண்டான வார்த்தை ஜாலங்களுடன் கலகலத்துக்கொண்டிருக்கின்றன மதுரையின் சுவர்களும் பஸ்களின் முதுகுகளும்.
தி.மு.க அரசின் நியாயத்தராசே...உங்களைப் புரிந்து கொண்டுதான் இருக்கிறோம்
நிழல் எது? நிஜம் எது? என்பது போகப்போக உங்களுக்கே புரியும்- இவை அழகிரிக்கு ஆதரவாதக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களுக்கு சில உதாரணங்கள்.அழகிரியின் படங்களுடன் ஆளுயரத்திற்கு போஸ்டர்கள் மிரட்டுகின்றன.
பெரும்பாலான போஸ்டர்கள் அழகிரிக்கு ஆதரவாகவும், தமிழக முதல்வரும் அழகிரியின் அப்பாவுமான கருணாநிதியைக்கண்டித்தும் தான் இருக்கின்றன.இந்த போஸ்டர்களுக்கு எதிராக யார் போஸ்டர் ஒட்டினாலும் நடப்பது வேறு என்று மிரட்டல் வேறு உள்ளதால் ஒதுங்கிக்கொண்டிருக்கிறார்கள் அழகிரியைஎதிராக நினைக்கும் பல திமுகவினர்.
இதையும் மீறி சிலர் கருணாநிதிக்கு ஆதரவாகவும் ஸ்டாலிக்கு ஆதரவாகவும் அழகிரியைக் கண்டித்தும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
நடுநிலையாக ஒரு போஸ்டரும் இருக்கிறது. அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டர். இதில் கருணாநிதிக்கு கேள்விஎழுப்பியிருக்கிறார்கள்.
மதுரை நகரில் ஆளும் கட்சியினர் பஸ்களை எரித்தும், குண்டுகளை வீசியும் வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். தூங்கா நகரம் துன்பநகரமாக மாறியிருக்கின்றது. தன் மகன் பெயரால் அட்டூழியம் செய்பவர்கள் மீது கருணாநிதி நடவடிக்கை எடுப்பாரா? மனு நீதி சோழனாக மாறுவாரா?என்று கேள்விகளுடன் போஸ்டர்கள் அடித்துள்ளனர் மார்க்சிஸ்டுகள்.
மொத்தத்தில் போஸ்டர் களபரங்களால் அமளிதுமளிப்பட்டுக்கொண்டிருக்கிறது மதுரை.