பெங்களூரில் போலீஸ் தடை உத்தரவு நீட்டிப்பு
பெங்களூர்:
பெங்களூரில் 144 போலீஸ் தடை உத்தரவு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் ஜூலை மாதம் 30-ம் தேதி சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து பெங்களூரில்ஏற்பட்ட பதட்டத்தால், பெங்களூரின் பல இடங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.
இதனால் பெங்ளூரில் ஜூலை 31-ம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு தொடர்ந்து நீடிக்கப்பட்டது.ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்த தடை உத்தரவு மேலும் ஒருவார காலம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் மடியாள்அறிவித்துள்ளார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த தடை உத்தரவு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.
ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாளின் உடல் நிலை பற்றி தவறான தகவல்கள் பரவி வருகின்றன. அவரது உடல் நிலை குறித்து பரப்பப்பட்டவதந்தியால் பதட்டம் ஏற்பட்டது. வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். வதந்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு உண்மை நிலையை அறிந்து கொள்ளலாம். பெங்களூரில் மத்திய அதிரடிப் படை,மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் கர்நாடக போலீசாரும் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பொது மக்களுக்கு எந்த விதமான இடையூறும் ஏற்படாது என அவர் தெரிவித்தார்.