நிதி மோசடியில் சினிமா டைரக்டரின் மனைவி கைது
சென்னை:
சென்னையில் நிதிநிறுவனம் நடத்தி ரூ 82 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தெலுங்குப் பட இயக்குநர் சக்கவர்த்தியின் மனைவி ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
தெலுங்குப்பட இசையமைப்பாளர் பென்டியாலா நாகேஸ்வரராவ். இவரது மகள் வனஜா சக்ரவர்த்தி. இவரது கணவர் சக்க்கரவர்த்தி சினிமா இயக்குநராகஇருக்கிறார். கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் வனஜா நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
இதற்கிடையே இவர் 98 ம் ஆண்டு இந்த நிதி நிறுவனத்தை மூடி விட்டுத் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து இந்த நிறுவனத்தில் பணம் போட்டவடிவேலு என்பவர் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார்.
போலீஸ் விசாரணையில் வனஜா செய்த மோசடி குறித்துத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வனஜா உள்பட 7 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணைநடத்தப்பட்டது. இதில் 3 பேர் போலீஸில் பிடிபட்டனர். மேலும் 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். வனஜா ஆந்திராவிற்குத் தப்பி விட்டார்.
இதற்கிடையே நிதிநிறுவன மோசடிகளை விசாரிக்கும் தனிநீதிமன்றம், வனஜாவைக் கைது செய்யும்படி வாரன்ட் பிறப்பித்தது. வனஜா ராஜமுந்திரியில் உள்ளஒரு வீட்டில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கமிஷனர் காளிமுத்து உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்போலீஸ் படையினர் ராஜமுந்திரி சென்று வனஜாவைக் கைது செய்தனர்.