அதலெடிக்ஸ்: தடம் பதிக்கத் தவறிய இந்தியர்கள்
சிட்னி:
அதலெடிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு திங்கள்கிழமை ஒரு மோசமான நாளாகியது.
அன்று நடந்த பல்வேறு போட்டிப் பிரிவுகளில் இரண்டில் மட்டுமே இந்தியர்கள் கலந்துகொண்டனர்.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் முதல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் சஞ்சய் கே.ராய் கலந்து கொண்டார். ஆனால், அவர் எந்தத் தடமும் பதிக்காமல் வெளியேறினார்.
மூன்று முறையும் அவர் தவறு செய்ததால் போட்டியிலிருந்து விலக்கப்பட்டார். இப்போட்டிப் பிரிவில் 8 மீட்டருக்கு மேல் தாண்டியவர்கள்தான் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.
அதே போல் பெண்களுக்கான வட்டு எறிதலில் நீலம் ஜஸ்வந்த் சிங் கலந்துகொண்டார். அவர் இரண்டாவது தகுதிச் சுற்றில் கலந்து கொண்டார். அவர் 55.26மீட்டர் தூரத்துக்கு வட்டு எறிந்தார்.
மொத்தம் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அவர் 25-வது இடத்தையே பிடித்தார்.இப் போட்டிப் பிரிவில் 60 மீட்டருக்கு மேல் வட்டு எறிந்தவர்கள்தான் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.