கன்னியாகுமரியில் மலேரியாவுக்கு 10 பேர் சாவு
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலேரியா நோய்க்கு இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் லியாகத் அலி கூறுகையில், கன்னியாக்குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக மலேரியாநோய் கடுமையாகப் பரவி வருகிறது.
இந்நோயால் இதுவரை 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கும் அறிவுரைகளை கேட்காததால் தான் இம்மாவட்ட மக்களிடையே மலேரியா நோய் பரவி வருகிறது.
அதிலும் குறிப்பாக மீனவர்கள் இந்நோயால் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்களிடையே இந்நோய் குறித்த விழிப்புணர்வுஇல்லாததால்தான் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நோயை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து வரும் 27 ம் தேதி பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்தஅதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க இருக்கிறோம் என்றார் லியாகத் அலி.