நாகப்பா தப்பியிருக்கக் கூடாது .. கருணாநிதி
சென்னை:
நாகப்பா தப்பி வந்ததை தவிர்த்திருக்கலாம் என்று தமிழக முதல்வர் கருணாநதி கருத்து தெரிவித்துள்ளார்.
வீரப்பன் பிடியில் இருந்து கன்னட சினிமா துணை இயக்குநர் நாகப்பா தப்பி ஓடி வந்துள்ளது பற்றி சென்னை கோட்டையில் வெள்ளிக்கிழமை முதல்வர்கருணாநிதி அளித்த பேட்டி:
கேள்வி: ராஜ்குமாருடன் கடத்தப்பட்ட நாகப்பா தப்பி வந்தது எப்படி? அவராக வந்தாரா?
பதில்: உங்கள் கேள்வியிலேயே பதிலும் அடங்கியிருக்கிறது. நாகப்பா தப்பித்து வந்து விட்டார் என்பது தான் உண்மை. கடத்தப்பட்ட எல்லோரையும்சேர்ந்தார்போல் விடுவிப்பதற்கு நக்கீரன் கோபால் சென்றிருக்கும் இந்த சமயத்தில் நாகப்பா மட்டும் ஏன் தப்பித்து வந்தார் என்பது ஆச்சரியமாகஇருக்கிகிறது.
அவர் கர்நாடக போலீசாரிடம் அளித்த விவரத்தில் ராஜ்குமாரையும் மற்றும் மூன்று பேரையும் வீரப்பன் மிகவும் நன்றாக கவனித்துக்கொண்டிருந்ததாகத்தான் சொல்லியிருக்கிறார். அப்படியிருந்தும் இந்த நான்காவது முறை எல்லோரையும் மீட்டுக் கொண்டு வரலாம் என்றநம்பிக்கையோடு கோபால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தும் நாகப்பா தப்பி வந்ததற்கான காரணம் விளங்கவில்லை. அதற்கு காரணம் ஒருவேளை அவரதுமன இயல்பாக இருக்கலாம்.
கேள்வி: இதன் காரணமாக கோபால் பேச்சுவார்த்தையில் தடை ஏற்படுமா?
பதில்: அப்படி ஒன்றும் ஏற்படாது என்று கருதுகிறேன்.
கேள்வி: நாகப்பா காயங்களுடன் வந்துள்ளதாக சொல்லப்படுகிறதே?
பதில்: கல்லிலும் முள்ளிலும் கானகத்தை சுற்றிவரும்போது காயங்கள் ஏற்படாமல் இருக்க முடியுமா?
கேள்வி: நாகப்பா செய்தியாளர்களிடம் சேத்துக்குளி கோவிந்தனையும், மாறனையும் தாக்கி விட்டு தப்பி வந்ததாகச் சொல்லியிருக்கிறாரே?
பதில்: அப்படிச் சொல்வதெல்லாம் வெறும் வதந்திகளே. எனக்கு கிடைத்த விவரங்களை உங்களிடம் சொல்லியிருக்கிறேன்.
கேள்வி: கர்நாடக முதல்வரிடம் நீங்கள் பேசினீர்களா?
பதில்: பேசவில்லை.
கேள்வி: நாகப்பா தப்பி வந்ததன் காணமாக கோபால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா?
பதில்: நல்லவைகளையே நினைப்போம்.
கேள்வி: காவல்துறையினரை பயன்படுத்தி வீரப்பன் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டம் எதுவும் உண்டா?
பதில்: இல்லை. அதுமாதிரியான ஏற்பாடு எதுவும் இல்லை. அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி நக்கீரன் கோபால் திரும்பி வந்ததற்குப் பிறகு தான்சிந்திக்க முடியும். ராஜ்குமாரையும் மற்றவர்களையும் நக்கீரன் கோபால் அழைத்து வருவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
நாகப்பா தப்பித்து வந்ததை தவிர்த்திருக்கலாம். அவரது மன இயல்பு காரணமாக அப்படிச் செய்திருந்தாலும் அவர் பொறுத்தது பொறுத்திருந்தார். இன்னும்நான்கு நாட்கள் பொறுத்திருந்திருக்கலாம் என்றார் கருணாநிதி.