நாகப்பா மீது ராஜ்குமார் குடும்பத்தினர் கோபம்
பெங்களூர்:
வீரப்பன் பிடியிலிருந்து தப்பித்து வந்ததால் நாகப்பா மீது நடிகர் ராஜ்குமாரின் குடும்பத்தார் கோபத்தில் உள்ளதாக தெரிகிறது.
வீரப்பனால் கடத்தப்பட்டு 60 நாட்களுக்குப் பிறகு, கன்னடத் திரைப்பட உதவி டைரக்டர் நாகப்பா சத்தியமங்கலம் காட்டிலிருந்து தப்பித்து வந்து விட்டார்.
இந்நிலையில் அவர், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவையும், நடிகர் ராஜ்குமார் குடும்பத்தையும் சந்தித்துப் பேசினார்.
இதற்கிடையே நடிகர் ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார் மற்றும் புனித் ஆகியோர் நாகப்பா மேல் கோபத்தில் உள்ளனர். அவர்கள் இதுகுறித்துக்கூறுகையில், எங்கள் தந்தை நடிகர் ராஜ்குமார், நாகப்பாவை சொந்த மகனைப் போலவே நடத்தினார். அவரை விட்டுவிட்டு நாகப்பா மட்டும் தப்பித்துவந்திருக்கக் கூடாது.
நான்காவது முறையாகக் காட்டுக்குச் சென்ற கோபால் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது நாகப்பா தப்பித்து வந்தது பெரிய தவறு.இதனால் எங்கள் அப்பாவுக்கும் மற்ற 2 பேருக்கும் ஏதாவது ஆபத்து ஏற்படலாமோ என்ற பயமும் இருக்கிறது என்றனர்.
முன்னதாக, நடிகர் ராஜ்குமார் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில் நாகப்பா தப்பித்து வந்துள்ளதால், பர்வதம்மாவும் மிகவும் கவலையடைந்துள்ளார்.