காக்கிச் சட்டைக்குச் சவால் விடும் வால் பையன்
சென்னை:
அங்கே கொலை, இங்கே வெடிகுண்டு என்று நாள்தோறும் ஒரு தவறான தகவலை கூறி சென்னை தாம்பரம் போலீசாருக்கு "தண்ணி காட்டி வருகிறான்ஒரு பொல்லாத சிறுவன். அவனை பிடிப்பதற்கு படாத பாடு படுகின்றனர் பாவம் அந்த போலீசார்.
தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு நாள் தவறாமல் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. போனில் பேசுவது 10 வயதுடைய ஒரு பையன். அதாவது"வால்பையன்.
முதல் நாள் பேசிய அவன் பல்லாவரத்தில் பயங்கரமான சண்டை. ரெண்டு பேரை வெட்டி கொன்று விட்டனர் என்று பதட்டம் குறையாமல் பேசினான்.பயந்து போன போலீஸ் பரபரப்பானது. ஒரு படையே பல்லாவரம் நோக்கிப் போனது. ஆனால், அங்கே அப்படி எதுவும் இல்லை.
அலைச்சல் என்றாலும் அப்படி எந்த பெரிய சம்பவம் இல்லையே என்ற திருப்தியில் நிம்மதியாக நிலையம் திருப்பினர். அடுத்த நாளும் அதே போன்.அதே குரல். தகவல் தான் வேறு. "ஜி.எஸ்.டி. சாலையில் ஒரு பெரும் விபத்து. எத்தனை பேர் இறந்திருப்பார்கள் என்றே தெரியவில்லை. பஸ்சும், லாரியும்போக முடியாமல் திணறுகின்றன என்று அடுக்கினான்.
அதே சிறுவன் தான் என்றாலும் அலட்சியப்படுத்த முடியாமல் போலீசார் ஜி.எஸ்.டி. சாலைக்கு சென்று பார்த்தனர். அப்படி எதுவும் இல்லை. சரி இனிமேல்அந்த பையனை விடக் கூடாது என்ற முடிவு கட்டினர். போன் பக்கத்திலேயே காத்திருந்தனர்.
ஆனால், பையன் சுட்டி மட்டுமல்ல; படு கெட்டி. இந்த முறை என்ன செய்தான் தெரியுமா? ஆலந்தூர் - பல்லாவரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கென ஒருபெரிய வாட்டர் டேங்க் உள்ளது. அதனருகிலேயே உள்ள அதற்கான அலுவலகத்திற்கு போன் செய்தான்.
"உங்கள் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளனர். மாலை 4 மணிக்கு அது வெடிக்கும். தப்பி ஓடி விடுங்கள் என்று எச்சரிக்கும் பாணியில் பேசி விட்டுபோனை வைத்து விட்டான்.
பயந்து போன அதிகாரிகள் அவசர அவசரமாக தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து தகவலை தெரிவித்தனர். வெடிகுண்டுசோதனையாளர்களுடன் போலீஸ் படை ஒன்று சில நிமிடங்களில் அந்த அலுவலகம் வந்தது.
ஒரு இடம் விடாமல் வெடிகுண்டுகளை தேடி களைத்துப் போன போலீசார் கடைசியில் ஒன்றுமில்லை என்பதை உறுதி செய்தனர். பின்னர் அதிகாரிகளை அழைத்துபோனில் தகவல் கொடுத்தது யார் என்று கேட்டபோது தான் அந்த வால் பையனின் வம்புச் சேட்டை இது என்பதை தெரிந்து கொண்டனர்.
நொந்து போன போலீசார் விஷயத்தை அதிகாரிகளுக்கு விளக்கினர். ஆனாலும், அவர்கள் பயம் தீரவில்லை என்பதால் மாலை 4 மணி வரைஅங்கேயே டோரா போட வேண்டியதாகி விட்டது போலீசாருக்கு.
இப்போது அந்த சிறுவனை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற வெறியோடு திரிகின்றனர் தாம்பரம் போலீசார். காக்கிச் சட்டையையே சீண்டிப்பார்த்த அந்த சிறுவனுக்கு இது தெரியாமலா இருக்கும்?.












Click it and Unblock the Notifications