தேர்தலில் கணவன் தோல்வி .. சோகத்தில் மனைவி தற்கொலை
பாலக்காடு:
உள்ளாட்சித் தேர்தலில் கணவன் தோல்வியால் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி பல இடங்களில் எதிர்பாராத தோல்வியடைந்தது.இதையடுத்து உள்ளாட்சி மன்ற வார்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்விடையந்த சில வேட்பாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
கேரள மாநிலம், குட்டன்புழை என்ற இடத்தைச் சேர்ந்தவர் சசி (35). இவர் குட்டன் புழை 6 வது வார்டில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிட்டுதோல்வியடைந்தார். இதையடுத்து மிகவும் வேதனையுடன் சசி இருந்தார்.
இவரது சோகத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட இவரது மனைவி மல்லிகா (28), தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில், அவர் கருகி இறந்தார்.
இதே போன்று, கொழிஞ்சாம்பாறை 9 வது வார்டில் போட்டியிட்டவர் ஜெயப்பிரகாஷ் (28). இவரும் தோல்வியடைந்தார். இதையடுத்து இவர் வீட்டில்சோகமாக அமர்ந்திருந்தார். அப்போது இவரது நண்பர்கள், வீட்டிற்கு முன்பு பட்டாசு கொளுத்தி, தோல்வியைச் சந்தோஷமாகக் கொண்டாடினர்.
இதனால் வெறுத்துப் போன ஜெயப்பிரகாஷ், ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கினார். அங்கு மிகவும் வேதனையடைந்த அவர், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.