ஆயுதபூஜையில் வைத்த போலீஸ் துப்பாக்கி அபேஸ்
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீஸ் நிலையத்தில் ஆயுத பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மர்மமான முறையில் காணாமல் போனது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எஸ்.பி.ஜாபர் உசேன் தலைமையில் ரயில்வே காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு வெள்ளிக்கிழமைமாலை ஆயுத பூஜையை ஒட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. பூஜையில் போலீஸார் உபயோகப்படுத்தும் பெரிய துப்பாக்கிகள்,அதிகாரிகள் வைத்திருக்கும் கைத்துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்தன.
பூஜை முடிந்ததும் உடனடியாக எடுத்து விடக்கூடாது என்பதற்காக அவைகள் அங்கேயே வைக்கப்பட்டிருந்தன. பின்னர் சனிக்கிழமை காலை பூஜை முடிந்துபார்த்தபோது அங்கு ஒரு கைத்துப்பாக்கி காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து
அதிர்ச்சியடைந்த போலீஸார் காவல் நிலையம் உள்பட சுற்றிலும் பல இடங்களில் சோதனை நடத்தினர். ஆனால் துப்பாக்கி கிடைக்கவில்லை. போலீஸார்தொடர்ந்து பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன கைத்துப்பாக்கி எந்த அதிகாரியின் துப்பாக்கி என்பதை போலீஸார் வெளியில் கூறமறுத்து விட்டனர்.