காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் திருமணத்துக்குச் சென்ற 2 பேர் பலி
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், திருமணத்திற்கு சென்று விட்டுத் திரும்பியவர்கள் மீது தீவிரவாதிகள் ஆர்ட்டில்லரி தாக்குதல் நடத்தியதில் 2 பேர் இறந்தனர்.
ஜம்மு நகரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ரன்பீர்சிங்போரா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்தது.
கோட்குப்பா பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் நடந்த திருமணத்திற்கு சென்ற சிலர் மினி பஸ்சிலும், காரிலும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்களது வாகனங்கள் ரன்பீர்சிங்போரா பகுதி அருகே வந்த போது, தீவிரவாதிகள் திடீர் என ஆர்ட்டிலரி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், பஸ்சில்பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றவர்கள் பஸ்சிலிருந்து கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர்.
ஆர்ட்டிலரி தாக்குதல் முடியும் வரை சிலர் பஸ்சின் கீழேயே சுமார் இரண்டு மணிநேரத்துக்கு படுத்துக் கொண்டு உயிர் தப்பினர்.
கோட்குப்பா பகுதியில் அடிக்கடி இந்திய ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே ஆர்ட்டிலரி தாக்குதல்கள் நடக்கும்.இத்தாக்குதல்களில் பெரும்பாலும் தீவிரவாதிகளை விட அப்பாவிப் பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர்.
வயல்களில் வேலை செய்யும் விவசாயிகள், கிராமங்களில் உறங்கிக் கொண்டிருக்கும் மக்கள் மற்றும் தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கும்குழந்தைகள் ஆகியோர் பெரும்பாலும் இத்தாக்குதலில் பலியாகின்றனர் அல்லது காயமடைகின்றனர்.
அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லாததாலும், துப்பாக்கிச் சத்தம் கேட்காததாலும் அவர்களால் தாக்குதல் நடக்கும் போது சுதாகரித்துக்கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.