அரசியல் விமர்சனம்
இது, அர்த்தமற்றது!
கனடாவில், பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடாது என்று சில மாதங்களுக்கு முன்னால் முடிவு எடுக்கபட்டது. மத்திய அரசின் இந்ததீர்மானத்தை ஏற்று, கனடா ஒரு நாள் கிரிக்கெட் பந்தய மாட்சுகள் ரத்தாகின.
இப்போது, கென்யாவில் நடக்கிற ஒரு நாள் கிரிக்கெட் பந்தயங்களில் மற்ற சில நாடுகளுடன், பாகிஸ்தானும் பங்கேற்கிறது ; இருந்தாலும் இந்தியாஅந்த பந்தயங்களில் கலந்து கொள்கிறது.
கனடா பந்தயம் ரத்தாகிய ஒரு சில மாதங்களில், இந்திய பாகிஸ்தான் உறவில் என்ன நல்ல மாற்றம் ஏற்பட்டுவிட்டது? இப்போது மட்டும்,பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடலாம் என்று ஏன் தீர்மானிக்கப்பட்டது?
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் மட்டுமே விளையாடுகிற பந்தயம் என்றால் - இந்தியா பங்கேற்காது ; அதனால்தான் கனடாமாட்சுகள் ரத்தாகின.
ஆனால் வேறு பல நாடுகளுடன் சேர்ந்து பாகிஸ்தானும் பங்கேற்கிற பந்தயம் என்றால், அதில் பங்கேற்க இந்தியாவுக்கு ஆட்சேபணை இல்லை ;அதனால்தான் கென்யா பந்தயத்தில் இந்தியா கலந்து கொள்கிறது என்று கொள்கை விளக்கம் அளிக்கப்படலாம். இது கொள்கை விளக்கம் அல்ல; குழப்பம்.
பாகிஸ்தானுடன் நமது உறவு மிகவும் சீர்கெட்டு கிடக்கிறது என்பது உலகறிந்த விஷயம். காஷ்மீரில் மட்டுமல்லாது, இந்தியாவின் வேறு சிலபகுதிகளிலும் கூட நாச வேலைகளை நடத்த பாகிஸ்தான் முனைந்துள்ளது என்பதும் நாடறிந்த விஷயம்.
இந்த நிலையில், சம்பிரதாயத்திற்காக சில ராஜரீக தொடர்புகள் இருந்தாலும் - நமது எதிர்ப்பை தெரிவிக்கிற வகையில், பந்தயங்களில் சேர்ந்துபங்கேற்பது என்பது கிடையாது என்று முடிவு எடுக்கலாம் அப்படி முடிவு எடுத்தால் அது எல்லா விளையாட்டு பந்தயங்களுக்கும் பொருந்த வேண்டும்- ஒலிம்பிக்ஸ் உட்பட.
இந்த மாதிரி ஒரு வைராக்கியம் தேவையே இல்லை ; ராஜரீக தொடர்புகள் உள்ள நிலையில், பந்தயங்களில் சேர்ந்து பங்கேற்பதில் தவறில்லை என்றுதீர்மானிக்கப்பட்டால், அதிலும் தெளிவு இருக்கும்.
அப்போது எல்லா பந்தயங்களிலுமே பாகிஸ்தானுடன் சேர்ந்து கலந்து கொள்ள இந்தியா முடிவு எடுக்க வேண்டும்.
இவை இரண்டுமே இல்லாமல், ஒரு பந்தயத்தில் பாகிஸ்தான் பகிஷ்கரிப்பு - மற்றொன்றில் பாகிஸ்தானுடன் பந்தபாசம் என்று மாறி மாறி,முன்னுக்குப் பின் முரணான நிலைகளை எடுப்பது, நமது முதிர்ச்சியின்மையைத்தான் காட்டுகிறது.
பாகிஸ்தான் அக்கிரமம் செய்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட ஒரு பகிஷ்கரிப்பு ; நமது பெருந்தன்மையைக் காட்ட ஒரு அரவணைப்பு என்றுசெயல்பட்டால், அது சாமர்த்தியம் அல்ல, அசட்டுத்தனம்.
இன்றைய உலகில், விளை யாட்டுக்களுக்கு பெரும் முக்கியத்துவம் இருக்கிறது. பாகிஸ்தான் சர்வதேச பந்தயங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்றுநிபந்தனை விதிக்க நம்மால் முடியாது
பாகிஸ்தானைப் புறக்கணிப்பது என்றால் பல பந்தயங்களை ஒதுக்க வேண்டியிருக்கும் ; ஒலிம்பிக்ஸில் கூட பங்கேற்க முடியாது, இப்படிப்பட்ட நிலையில், நடைமுறைநிலையையொட்டி, பாகிஸ்தானுடன் இருக்கிற பிரச்னைகளுக்கும், விளையாட்டுப் பந்தயங்களும் தொடர்பு காணப் போவதில்லை ; அதனால் பந்தயபுறக்கணிப்பு கிடையாது என்று நாம் தீர்மானித்து விடுவது நல்லது.












Click it and Unblock the Notifications