தீபாவளி வசூலில் இறங்கிய போலி போலீஸ்
சேலம்:
சிபிசிஐடி போலீஸ் எனப் பொய்கூறி பொதுமக்களிடம் தீபாவளி வசூல் செய்த போலி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து விவரம் வருமாறு:
சேலம் பச்சப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் செந்தில்குமார் (19).
இவர் கல்லாங்குத்தில் உள்ள ஒரு எலக்ட்ரிகல் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சனிக்கிழமை காலை தான் வேலை பார்த்துவரும் கடை வாசலில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த போலீஸ்காரர் ஒருவர், நீ பிக்பாக்கெட் அடிக்கும் கும்பலைச் சேர்ந்தவன். உன்னை சந்தேகக் கேசில் விசாரணை நடத்த வேண்டும்.விசாரணைக்கு வரவில்லையென்றால் கைது செய்வேன் என்று கூறி தன் கையிலிருந்து கைவிலங்கைக் காட்டி மிரட்டியுள்ளார்.
இவரது மிரட்டலால் பயந்துபோனார் செந்தில்குமார். உடனடியாக அவரை அழைத்து, அருகிலிருந்து சந்திற்குள் சென்றார். பின்னர் அந்தப் போலீஸ்காரர்செந்தில்குமாரிடம், உன்னை நான் கைது செய்யாமல் இருக்க வேண்டுமானால் நீ பணம் தர வேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளார்.
இதையடுத்து அவரிடமிருந்து ரூ 720 ஐ பறித்துக் கொண்டு சென்று விட்டார். பின்னர் செந்தில்குமார் இச்சம்பவம் குறித்து சேலம் டவுன் போலீசில் புகார்செய்தார்.
இதையடுத்து, தனிப்போலீஸ் படை விசாரணை நடத்தி ஒருவரைக் கைது செய்தனர். அவர் பெயர் சம்சுதீன். வயது 30. சேலம் எருமாபாளையம் பாத்திமாநகரைச் சேர்ந்தவர். போலீஸார் பிடிக்கும்போது, சம்சுதீன் அசல் போலீஸ் உடையில் இருந்தார்.
போலீஸ் விசாரணையில், தான் போலீஸ் உடைகளை சென்னையில் தைத்ததாகவும், தொப்பி, பெல்ட் வாங்கியதாகவும் கூறினார். கைவிலங்கு மற்றும்போலி போலீஸ் அடையாள அட்டையை சென்னையில் தயாரித்ததாகவும் கூறினார்.
சில ஆண்டுகளுக்கு ஆத்தூரில் இதே போல போலி போலீஸ் வேடமணிந்து மிரட்டல் வசூலில் ஈடுபட்ட போது போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஒருவருட சிறைத்தண்டனைக்குப்பின் அவர் மீண்டும் இதே போல் ஏமாற்றுவேலையைத் தொடர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.